முதல்வர் ஸ்டாலின் குடும்பம் பற்றி அவதூறு.. அதிமுக ஐடி விங் நிர்வாகியை ஆபீஸுக்கே போய் தூக்கிய போலீஸ்!
கோவை : சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்து வந்ததாக அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி சுப்பிரமணி, தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் மற்றும அவரது குடும்பத்தினர் மீது அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திமுக ஐடி விங் நிர்வாகிகள், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் இன்று சுப்பிரமணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதல்வர் மீது அவதூறு பரப்பிய அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அலுவலகத்திலேயே இருக்கும் வெள்ளி வேல்- சிபிசிஐடி.. அப்போ சிவி சண்முகம் ஏன் அப்படி சொன்னார்?
அதிமுக ஐடி விங் நிர்வாகி
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற அக்ரி சுப்பிரமணியன் (46). இவர் கோவில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். மேலும் கோவை புறநகர் வடக்கு அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார்.
முதல்வர் குடும்பம் பற்றி அவதூறு
சுப்பிரமணி, சமூக வலைதளங்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவர்களது குடும்பத்தினர் குறித்தும் பல்வேறு அவதூறு தகவல்களை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
ஆபீஸுக்கே சென்று தூக்கிய போலீஸ்
இந்தப் புகாரின் பேரில் போலீசார் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வந்த அதிமுக நிர்வாகி சுப்பிரமணியன் பணிபுரியும் அலுவலகத்திற்குச் சென்று சுப்பிரமணியை அழைத்து வந்து சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அவ்வாறான பதிவுகளை வெளியிட்டது உறுதியானது.
சிறையில் அடைப்பு
இதைத் தொடர்ந்து அவர் மீது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல், வதந்திகளை வெளியிடுதல் அல்லது பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.