சொன்னதை செய்த செந்தில் பாலாஜி.. கோவை தெற்கில் மீண்டும் சர்ப்ரைஸ்
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். பிரச்சாரத்தில் தொடக்கத்தில் குறிப்பிட்ட விஷயத்தை செந்தில் பாலாஜி நிறைவேற்றியுள்ளார். மேலும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை கொடுத்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் பிரச்சாரம் செய்த செந்தில் பாலாஜி பேசுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில், கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் இல்லை. ஆனாலும் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் தானே சட்டமன்ற உறுப்பினராக எண்ணி, முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

திமுகவில் இணைந்த பாஜகவினர்
கோவையின் அடையாளமாகத் திகழும் செம்மொழிப் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அவிநாசி சாலை மேம்பாலம், ஜி.டி. நாயுடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்துள்ளோம். மேற்கு புறவழிச்சாலை, பெரியார் நூலகம், சாலைகள் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துள்ளன. 100 அல்ல, ஆயிரம் கோரிக்கைகள் வந்தாலும் அதை நிறைவேற்றி தரும் உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன்.
கோவை தெற்கு தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன்" என்றார் . நேற்றைய பிரச்சாரத்தின்போது 100 க்கும் மேற்பட்ட பாஜக இளைஞரணியினர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கோவை தெற்கு தொகுதி தற்போது பாஜக வசம் உள்ளது. அந்தக் கட்சியின் இளைஞர்கள் திமுகவில் இணைந்திருப்பது பாஜகவினரை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.
செய்து காட்டிய பாலாஜி
கோவை தெற்கு தொகுதியில் 11 வார்டுகள் உள்ளன. இந்த 11 வார்டுகளிலும் நடந்தே சென்று தான் பிரச்சாரம் செய்வேன் என்று செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதனால் கடந்த 2 வாரங்களில் கோவை தெற்கு தொகுதியின் அனைத்து வார்டுகளிலும் நடந்தே சென்று நேற்றுடன் முதல்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டார்.
கோவையில் உள்ள மற்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் அவர் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் இருப்பதால் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பயணம் செய்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.
சர்ப்ரைஸ்
கோவை தெற்கு தொகுதியின் அனைத்து வார்டுகளில் பிரச்சாரம் செய்திருந்தாலும், அங்கு மீண்டும் செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்யவுள்ளார். விரைவில் அங்கு இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை செந்தில் பாலாஜி மேற்கொள்ளவுள்ளார். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications