தேசிய அளவில்.. பாஜக சதிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டியவர் ஸ்டாலின்.. புகழ்ந்த தேஜஸ்வி
கோவை: "தேர்தலுக்கு மத்தியிலும் பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் பேசினார். நாடாளுமன்றத்தில் நேற்று தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததில் முதலமைச்சர் ஸ்டாலினின் பங்கை தேஜஸ்வி புகழ்ந்தார்.
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகார் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், இன்று திருப்பூரில் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய தேஜஸ்வி, "இந்தியாவின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளால் டெல்லியின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடியாகத் திகழ்கிறது. சமூக நீதியையும் வளர்ச்சியையும் இணைத்துச் செயல்படுத்தும் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கிறது.
பாஜகவின் உள்நோக்கம் கொண்ட தொகுதி மறுவரையறை மசோதாவைத் தேசிய அளவில் முறியடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியப் பங்காற்றினார். தென்னிந்திய மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் இந்தச் சதிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டிய பெருமை அவருக்கு உண்டு. இன்று அந்த மசோதா வீழ்ந்திருப்பது மாநில உரிமைகளுக்குக் கிடைத்த வெற்றி.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டெல்லிக்கு ஒரு வலுவான செய்தியைச் சொல்லும். இந்தியா கூட்டணியின் இந்த ஒற்றுமை, எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வகுப்புவாத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும். மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களைக் காக்க திமுகவிற்குப் பெரும் ஆதரவை வழங்க வேண்டும்." எனப் பேசியுள்ளார்.













Click it and Unblock the Notifications