ராஜ அலங்காரத்தில் மருதமலை முருகன்.. அரோகரா முழக்கத்துடன்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்தலமான மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவாக திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
முருகனின் ஏழாம் படை வீடாகக் கருதப்படும் மருதமலை கோவை மாவட்டத்தின் நகர் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது. முருக பக்தர்களுக்குப் பிடித்த கோயில்களில் பிரதான இடம்பிடித்திருப்பது மருதமலையாகத்தான் இருக்கும்.

மருதமலை மேல் அமைந்துள்ள முருகப்பெருமானின் கோயில் அந்த காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது. இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் என தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விசேஷ நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும்.
1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான் என பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவம்பர் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் விநாயகர் பூஜையுடன் சூரசம்ஹார திருக்கல்யாண விழா தொடங்கியது.
நவம்பர் 2 ஆம் தேதி விநாயகர் பூஜை, கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சி, நவம்பர் 2 முதல் 8 ஆம் தேதி வரை யாகசாலை பூஜை, சுவாமி திருவீதி உலா, அபிஷேக பூஜை நடைபெற்றன. நவம்பர் 7 ஆம் தேதி வேல் வாங்குதல், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதல், அன்னையிடம் வேல் வாங்குதல், உற்சவரிடம் சண்முகார்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்றன.
சூரசம்ஹார விழா சிறப்பாக நேற்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பின்னர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்லக்கில் திருவீதி உலா வந்தார். பக்தர்கள் அரோகரா என்ற பக்தி முழக்கம் மருதமலையையே அதிரச் செய்தது. முருகனின் திருக்கல்யாணத்தை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.












Click it and Unblock the Notifications