ஈஷாவை விட பாதுகாப்பான இடம் உலகில் இருக்க முடியாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பெண் துறவிகள்
கோவை: கோவை ஈஷா மைய துறவிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தான் ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது என்று 2 பெண் துறவிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் 'இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது’ என்றும் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்ட இந்த மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதி யோகி சிலை உள்ளது. ஆண்டுதோறும் மகாசிவராத்திரி தினத்தில் ஈஷா யோகா மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த யோகா மையத்தில் துறவிகள் தங்கி உள்ளனர். மேலும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் ஏராளமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் கோவை ஈஷா யோகா மையம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அதாவது யோகா கற்றுக்கொள்ள சென்ற தனது மகள்கள் லதா, கீதாவை மூளைச்சலவை செய்து சன்னியாசிகளாக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து ஈஷா யோகா மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்த நிலையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதாவது ஈஷா யோகா மையம் சார்பில், 'தமிழ்நாடு அரசின் அறிக்கையில் இரு பெண் துறவிகளும் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதில் நியாயமில்லை. ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை என கூறப்பட்டது.
கோவை ஈஷாவுக்கு திருப்புமுனை தந்த முகுல் ரோத்தகியின் வாதம்.. உச்ச நீதிமன்றத்தில் நேற்று என்ன நடந்தது?
காமராஜ் தரப்பில், ‛‛கோவையில் ஈஷா மையம் அமைந்துள்ள பகுதியில் யானைகள் நடமாட்டம் தொடர்பான அச்சுறுத்தல் இருப்பதால், மகள்கள் குறித்த கவலை உள்ளது. எனவே நாடு முழுவதும் உள்ள அனைத்து மதங்களின் ஆசிரமங்கள், சத்திரங்கள், மடங்கள், விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாரம் ஒருமுறை பெண் போலீசை அனுப்பி அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டது. இதனை கேட்ட உச்சநீதிமன்றம் கோவை ஈஷா மையத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது. அதே சமயம் ஈஷா யோகா மையம் தொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளை தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.
இந்நிலையில் தான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ள 2 பெண் துறவிகளும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மா மதி என்ற துறவி கூறுகையில்,"அனைவருக்கும் வணக்கம். இந்தியாவின் உச்சநீதிமன்றத்திற்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற மிகவும் தகுந்த தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள். எங்களுடைய பாதையில் இருப்பதற்கு மிகவும் ஆதரவாக இந்த தீர்ப்பு இருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் இருந்து, நாங்கள் எங்களின் சொந்த விருப்பத்தில் தான் இங்கு இருக்கிறோமா? அல்லது பிறரின் வற்புறுத்தலின் பேரில் இங்கு இருக்கிறோமா? என்று ஊடகங்கள் மற்றும் பலர் தற்போது வரை, இந்த சூழ்நிலையை மிகவும் பெரிதுபடுத்தி திரித்து, திரித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் விருப்பப்பட்டு தான் இந்த முடிவை தேர்ந்தெடுத்தோம். யாருடைய கட்டாயத்தின் பெயரிலோ அல்லது வற்புறுத்தலின் பெயரிலோ நாங்கள் இங்கு வரவில்லை. இந்த முடிவை உண்மையிலேயே நாங்கள் இந்தப் பாதையில் இருக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இருந்த ஆசையினால் எடுத்தோம்.” எனக் கூறியுள்ளார்.
அதேபோல், மற்றொரு பெண் துறவியான மா மாயு அவர்கள் கூறுகையில், “ நான் ஈஷா யோகா மையத்திற்கு தன்னார்வலராக வந்தது யார் சொல்லியும் இல்லை. நான் 2009-இல் இங்கு முழுநேர தன்னார்வதொண்டராக வந்து, 2011-இல் பிரம்மச்சரிய பாதையை தேர்ந்தெடுத்தேன். நான் இங்கு முழு நேரமாக வந்து ஏழு வருடத்திற்கு பிறகு, துரதிருஷ்டவசமாக பல ஊடக விசாரணைகளை சந்திக்க வேண்டி இருந்தது. மீண்டும், மீண்டும் அதே கேள்விகளுக்கு பதில்கள், வேதனையான விஷயங்கள் என எல்லாவற்றையும் பார்க்க வேண்டி இருந்தது.
இந்த எல்லா கஷ்டங்களிலும், ஒரு சமூகமாக இங்கு எங்களுடன் இருந்த மக்கள் கொடுத்த தெம்பு வார்த்தைகளினால் விளக்க முடியாது. பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இருக்கிறதா என்றுக் கேட்டால், இதை விட பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு நீங்கள் வந்தால், நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என்று கூட, இங்கு இருப்பவர்களுக்கு சிந்தனை இருக்காது. பெண்ணை ஒரு உயிராக பார்ப்பதை விட பெரிய மரியாதை இருக்க முடியாது.
இங்கே துறவிகளாக இருப்பது 215 பேர் தான், திருமணம் செய்து கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இங்கு இருக்கின்றவர்களில் திருமணம் வேண்டும் என்கிறவர்களுக்கு திருமணம். துறவரம் வேண்டும் என்கிறவர்களுக்கு துறவரம். இதற்கு சத்குருவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் 'பெண் துறவிகள் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் தங்கி இருக்கின்றனர். அதனால் ஈஷாவிற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக குறிப்பிட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி, 'ஒரு அமைப்பை இழிவுபடுத்துவதற்காக இது போன்ற மனுக்களை பயன்படுத்தக் கூடாது’ என்று கூறியது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications