சேலம் - கொச்சின் பைபாஸில் நடந்த சம்பவம்.. நொடியில் பறிபோன குழந்தை உட்பட மூன்று உயிர்.. நடந்தது என்ன?
கோவை: கேரள மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த காரும், எதிரே வந்த ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதில், தாத்தா, பாட்டி, பேரன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மருமகள் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரள மாநிலத்தில் இருந்து பெங்களூர் செல்வோர் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவது வழக்கம். நீலாம்பூர் பகுதியில் இருந்து மதுக்கரை வரை நான்கு வழிச் சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால், இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே இந்த சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஈச்சர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம். இவர் தனது மனைவி ஷீபா மற்றும் பேரன் ஆருண் மற்றும் மருமகள் அலினா தாமஸ் ஆகியோருடன் பெங்களூருக்கு இன்று காலை காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். தமிழகத்தின் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் கார் சென்றுள்ளது.
அப்போது, மதுக்கரை அருகே கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரியும், ஜேக்கப் ஆபிரகாம் ஓட்டிச் சென்ற காரும் திடீரென நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜேக்கப் ஆபிரகாம், அவரது மனைவி ஷீபா மற்றும் பேரன் ஆருண் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருமகள் அலினா தாமஸ் ஆம்புலன்ஸ் மூலம் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்த தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த கந்தன் என்பவரின் மகன் சக்திவேல் (39) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், கோவையில் இன்று காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் சேலம் - கொச்சின் சாலையில் நீர் தேங்கி வலுவலுப்பாக காணப்பட்டது. இந்நிலையில், மதியம் 12 மணி அளவில் அந்த வழியாக வந்த காரும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, அருகில் இருந்த அனைவரும் அங்கு சென்று மீட்பு பணியைத் தொடங்கினோம். இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பெண்ணை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.
மேலும், சேலத்தில் இருந்து நீலாம்பூர் வரை ஆறு வழிச்சாலை உள்ள நிலையில் நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை நான்கு வழிச் சாலையாக குறுகியுள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
இப்பிரச்னையை மாநில அரசு கருத்தில் கொண்டு உடனடியாக இந்த 20 கிலோமீட்டர் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விபத்தால் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications