காவிரியை மீட்க ஈஷாவின் முயற்சி.. விவசாயிகளுக்காக முதல்வர் சூப்பர் முடிவு.. சத்குரு வரவேற்பு
Recommended Video
கோவை : காவிரி நதியை மீட்டெடுப்பதற்கும், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த காவிரி கூக்குரல் இயக்கத்தை ஆரம்பித்துள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் முயற்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ஆகியோர் முழு ஆதரவு அளித்துள்ளதுடன் விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
காவிரி நதியை மீட்டெடுப்பதற்கும், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் எனும் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடந்த மாதம் தொடங்கினார்.
இந்த இயக்கத்தின் மூலமாக தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட ஈஷா இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல்கட்டமாக, அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்கள் நடத் திட்டமிட்டுள்ளது என ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறினார்.
விவசாயிகள் பொருளாதாரம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், விவசாயிகளின் பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் மேம்படுத்த தற்போது நம்மிடம் இருக்கும் ஒரே தீர்வு வேளாண் காடு வளர்ப்பு மட்டுமே. மரங்களுக்கு இடையே விவசாயம் செய்ய வேண்டும்.
விவசாயிகள் வருமானம் உயரும்
ஈஷா வேளாண் காடு இயக்கத்தின் மூலம் பெற்ற அனுபவத்தின்படி, சராசரி விவசாயி வேளாண் காடு முறைக்கு மாறும்போது, அவர்களின் வருவாய் 5 முதல் 7 ஆண்டுகளில் 3 முதல் 8 மடங்கு அதிகமாகிறது. எனவே காவிரி நதிப் படுகையில் உள்ள விவசாய நிலங்களில் குறைந்தபட்சம் 33 சதவீதம் வேளாண் காடாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கி உள்ளோம் என்றார்.
செப்.3ம் தேதி பயணம்
இந்நிலையில் சத்குரு, விவசாயிகளை நேரடியாகச் சந்திப்பதற்காக வரும் செப். 3-ஆம் தேதி தலைக்காவிரியில் தொடங்கி செப். 15-ஆம் தேதி திருவாரூர் வரை பயணம் செய்ய உள்ளார். 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈஷா மையம் அறிவித்துள்ளது.
|
சத்குரு வரவேற்பு
இதனிடையே ஈஷா காடு வளர்ப்பு திட்டம் தொடர்பாக அந்த மைய அதிகாரிகள் தமிழக முதல்வரை எடப்பாடி பழனிச்சாமியையும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவையும் சந்தித்து பேசினர். இது தொடர்பாக டுவிட்டரில் சத்குரு, "வேளாண் காடுகள் வளர்ப்பிற்கு மாற, விவசாயிகளுக்கு மானியம் வழங்க முடிவு செய்திருக்கும் தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் எமது நன்றிகள். மாநிலத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கும் விவசாயம் சார்ந்த துயரங்களுக்கும் இது சிறப்பான மாற்றமாய் அமைந்திடும். இதனை நாம் நிகழச் செய்வோம்" என்றார்.
|
சத்குரு பாராட்டு
இதேபோல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உடனுடனான சந்திப்பு குறித்து கருத்து பதிவிட்டுள்ள சத்குரு, காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு கர்நாடக முதல்வரும், அந்த மாநில அரசும், அளித்த ஆதரவையும் அர்ப்பணிப்பையும் மிகவும் பாராட்டுகிறோம். மாநிலத்தில் வேளாண்காடுகளை ஊக்குவிக்கும் அரசின் முடிவு என்பது விவசாயிகள் மற்றும் காவிரி தாயின் நல்வாழ்வை உறுதி செய்யதற்காக நீண்டதொரு பயணமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.