வால்பாறை சாலை விபத்தில் சிக்கிய வாலிபர் மூளைச்சாவு - 5 பேருக்கு கண்கள், சிறுநீரகம், கல்லீரல் தானம்
கோவையில், விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.
கோவை: வால்பாறையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்தனர். சிறுநீரகம், கண், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் ஐந்து நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
Recommended Video
உயிரிழந்த நிலையிலும் ஐந்து பேருக்கு வாழ்வழித்த இளைஞரின் பெயர் ஹரிகரன், இவர், கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தாய்மூடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன் என்பவரின் மகனாவார்.
இவர் வால்பாறையில் உள்ள நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 16ஆம் தேதி தனது நண்பர்களுடன் இஞ்சிப்பாறை மைதானத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று விளையாடினார். போட்டி முடிந்ததும் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மூளைச்சாவு அடைந்த மணப்பெண்.. உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!. கர்நாடகாவில் நெகிழ்ச்சி!
சாலை விபத்து
வால்பாறை போட் அவுஸ் பகுதியில் வந்த போது, முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஹரிஹரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மூளைச்சாவு
பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். அதன்பேரில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹரிஹரன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
உடல் உறுப்புகள் தானம்
இதை கேட்ட அவரது தாயார் பழனியம்மாள், தனது மகன் ஹரிஹரனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தார். சிறுநீரகம், கண், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை ஐந்து நபர்களுக்கு தானமாக வழங்க, மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
5 பேருக்கு மறுவாழ்வு
ஹரிகரன் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மருத்துவ மனை டீன் நிர்மலா, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய டீன் நிர்மலா, மூளைச்சாவு அடைந்தவரின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று, கோவை அரசு மருத்துவமனையில் தொடர் டயாலிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனையில் டயாலிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கும் தானமாக அளிக்கப்பட்டதாக கூறினார். கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் இரண்டு கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்வையிழந்த இருவருக்கும் வழங்கப்பட்டதாக கூறினார்.