தீபாவளிக்கு மக்களுக்கு கட்டாயம் கொடுக்கனும்.. முதல்வரிடம் வானதி சீனிவாசன் வைத்த முக்கிய கோரிக்கை
கோவை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் இரண்டே கால் லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெளியில் கடைகளில் வாங்குவதை விட குறைந்த விலையில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவற்றை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் நகர்வு செய்து வழங்கும். ஆனால் இந்த மாதம் பல ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு துவரம் பருப்பு வழங்கப்படவில்லை. இதற்கு துவரம் பருப்பு கையிருப்பு அளவு குறைந்து இருப்பது தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறுகையில், தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்கள் யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. கடந்த பல மாதங்களாக, சில நாட்கள் மட்டுமே துவரம் பருப்பு கிடைக்கிறது.
வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இதனால், ரேஷனில் கிலோ ரூ. 30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை, நடுத்தர மக்கள் உள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில், ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3,473 டன் மட்டுமே மட்டுமே சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இது ஏழை, நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே, திமுக அரசு தனது தூக்கத்தை கலைத்து, போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதுபோல, தீபாவளிக்கு முன்பாக பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு கிடைப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications