கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத்.. 30ல் தொடக்கி வைக்கும் மோடி.. டிக்கெட் கட்டணம் எவ்வளவு
கோவை: வந்தே பாரத் ரயில் சேவை கோவை-பெங்களூரு இடையே டிசம்பர் 30ம் தேதி தொடங்கப்பட உள்ளது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ள நிலையில் வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.
வந்தே பாரத் ரயில்: நாடு முழுவதும் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. காரணம் புதிய வடிவமைப்பு, தூய்மை, உணவு உட்பட எல்லாமே கிடைப்பதோடு அலுப்பு தெரியாமல் பயணம் செய்யலாம். விரைவாகவும் செல்லலாம் என்பதால் கட்டணம் அதிகம் என்றாலும் இந்த ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.

கோவை - பெங்களூரு: தமிழ்நாட்டில் இதுவரை சென்னை - மைசூரு, சென்னை - கோயம்புத்தூர், சென்னை - திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மேலும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இது கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே இயக்கப்படவுள்ளது.
4வது வந்தே பாரத்: இதன் மூலம் தமிழ்நாட்டுக்குக் 4வது வந்தே பாரத் ரயில் கிடைத்துள்ளது. கோவை - பெங்களூரு இடையே நிறைய தொழில் வர்த்தகத் தொடர்புகள் இருப்பதால் போக்குவரத்தும் அதிகம் உள்ளது. இதனால் இந்த நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
சோதனை ஓட்டம்: இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் எல். முருகன் கோவை பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார். அமைச்சர் சொன்னது போலவே, வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. கோவை ரயில் நிலையத்தில் கற்பூரம் காட்டி பூஜை செய்த பின்னர் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
ஈஸி பயணம்: எட்டு பெட்டிகளுடன் கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட சோதனை ஓட்ட ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக காலை 11:30 மணி அளவில் பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அதன் பின்னர் பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சோதனை ஓட்ட ரயில் இரவு 8 மணி அளவில் கோவை திரும்புகிறது.
மோடி: வரும் 30ம் தேதி கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளது. பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து இதை காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைக்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான புக்கிங் தொடங்கியுள்ளது.
டிக்கெட் கட்டணம்: கோவை - பெங்களூரு இடையிலான 380 கிலோமீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடையும். இதில் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் உடன் கூறிய ஏசி சேர் கார் பெட்டிகள் அடங்கியிருக்கும். சாதாரண சேர் கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 1000மாவும், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட் குறைந்தபட்சம் 1850 ஆகவும் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications