விஜய் முதல்வராவது உறுதி.. நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார் - அடித்து சொன்ன நடிகர் பெஞ்சமின்
கோவை: ‛‛விஜய் எதை தொட்டாலும் வெற்றி தான். தோல்வி என்பது அவரது வாழ்க்கையில் கிடையவே கிடையாது. ரொம்ப எளிமையான மனிதர். சின்னக்குழந்தைகள் மனதில் யார் இடம் பிடிக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக ஜெயிப்பார்கள். எம்ஜிஆர் சின்னக்குழந்தைகள் மனதில் இடம்பிடித்தார். முதல்வரானார். அதேபோல் விஜய் சின்னக்குழந்தைகள் மனதில் இடம் பிடித்துள்ளார். விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார். அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நடிகர் பெஞ்சமின்.
தமிழக வெற்றி கழகத்தை விஜய் தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அவரது கட்சி போட்டியிட உள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதால் விஜய் தனது பிரசாரத்தை ஒத்திவைத்துள்ளார். விரைவில் பிரசாரம் தொடங்கப்பட உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது. இதனால் நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் தான் நடிகர் விஜய் தமிழகத்தை ஆள்வார் என்று நடிகர் பெஞ்சமின் கூறியுள்ளார். இதுதொடர்பாக கோவையில் நடிகர் பெஞ்சமின் அளித்த பேட்டியில் கூறியதாவது:
விஜய் சார் எதை தொட்டாலும் பொன்னாகும் என்று சொல்வார்கள். எதை தொட்டாலும் வெற்றி தான். தோல்வி என்பதே அவரது வாழ்க்கையில் கிடையவே கிடையாது. அப்படியொரு மாமனிதர் தான் விஜய். விஜய் உடன் நான் திருப்பாச்சி படத்தில் நடித்துள்ளேன். 170 நாள் அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
ரொம்ப எளிமையான ஒரு மனிதர். அவர் உடன் யாரை நடிக்க வைத்தாலும் அவர்களை வேண்டாம் என்று சொன்னதே கிடையாது இப்போது பொது சேவைக்காக வந்துள்ளார். அவர் படம் ரிலீசானால் ரூ.500 கோடி முதல் ரூ.1000 கோடி வரை வசூல் செய்யக்கூடிய மாபெரும் நடிகர். அதையெல்லாம் விட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்து உள்ளார் என்று சொன்னால் உண்மையில் ரொம்ப பெரிய விஷயம்.
சின்னக்குழந்தைகள் மனதில் யார் இடம் பிடிக்கிறார்களோ? அவர்கள் கண்டிப்பாக ஜெயிப்பார்கள். புரட்சி தலைவர் எம்ஜிஆர் சின்னக்குழந்தைகள் மனதில் இடம்பிடித்தார். முதல்வரானார். அதேமாதிரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சின்னக்குழந்தைகள் மனதில் இடம்பிடித்தார். அதன்பிறகு விஜயை தான் சொல்ல வேண்டும். அவருடன் சின்னக்குழந்தைகள் மனதில் இடம் பிடித்துள்ளார். விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார். அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. வாழ்க விஜய் சார்.'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications