எடப்பாடியின் திடீர் என்ட்ரி.. ஷாக் ஆன திமுக புள்ளிகள்.. ஸ்டாலினின் கொங்கு பிளானில் உச்சகட்ட பரபர!
கோவை : முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு கோவை வரவிருக்கும் நிலையில், நாளை கோவைக்கு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஒரே நேரத்தில் எதிரெதிர் முனைகள் கோவையில் முகாமிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில், எடப்பாடி பழனிசாமியும் கோவைக்கு வருகை தருவது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர் அதிமுகவினர்.
ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைய இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஈபிஎஸ்ஸின் இந்த கோவை விசிட் கவனத்தைப் பெற்றுள்ளது.

கோவை செல்லும் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை செல்கிறார். நாளை காலை முதல்வர் ஸ்டாலின் கிணத்துக்கடவிற்கு செல்கிறார். அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். சுமார் 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகா பிளான்
நாளை மாலை முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் பிரமாண்ட விழா நடக்கிறது. பொள்ளாச்சியில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மாநாடு போல பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கொங்கு மண்டல முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய உள்ளனர்.

அதே நாளில்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதே நாளில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கோவைக்கு வருகை தர இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைய இருப்பதாகக் கூறப்படும் அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கோவை வருவது திமுகவினர் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் வருகிறார்?
கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் இல்ல விழா நாளை கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை கோவைக்கு வருகிறார்.

ஒரே நேரத்தில் இருவரும்
இந்த விழாவில் பங்கேற்கும் அவர், நாளை இரவே விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் நிலவி வரும் மோதலுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி கோவை வருவதும், அதே நாளில் முதல்வர் ஸ்டாலினும் கோவையில் இருப்பதும் அரசிய அரங்கில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இருவரும் வருவதால், கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாஸ் காட்ட திட்டம்
முதல்வர் ஸ்டாலின் கோவை சுற்றுப்பயணத்தையொட்டி, திமுக நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வருகிறார். இந்நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர்களும், கோவையில் ஈபிஎஸ் தரப்பின் மாஸை காட்டுவதற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பரபரக்கும் கோவை
திமுக, அதிமுக என இரு கட்சிகளின் தொண்டர்களும், அதிரடி திட்டங்களோடு தலைவர்களை வரவேற்கத் தயாராகி வருவதால் கோவை மாவட்ட அரசியல் அடுத்த சில நாட்களுக்குத் தகிக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கான ஏற்பாடுகளால், இப்போதே கொங்கு மண்டலம் பரபரத்து வருகிறது. இந்தச் சூழலை ஓபிஎஸ் தரப்பும் கூர்ந்து கவனித்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications