இலங்கை சீதை கோவிலில் அண்ணாமலை தரிசனம்... என்ன சொன்னார் தெரியுமா!
கொழும்பு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை நுவேரா எலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதை கோவிலில் தரிசனம் செய்தார். மேலும் கோவிலை குறிப்பிட்டு இந்தியா மற்றும் இலங்கையின் வரலாறு, நாகரீகம் ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இதனால் இலங்கையில் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இலங்கை மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது. தமிழக அரசும் உதவி செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

இலங்கையில் அண்ணாமலை
இந்நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக இன்று அதிகாலை இலங்கை புறப்பட்டு சென்றார். அங்குள்ள தமிழ் எம்.பி.க்கள் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். இங்கு தமிழர்கள் வசிக்கின்றனர்.

மே தினம் கொண்டாட்டம்
ஆண்டு தோறும் மே தினத்தை தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் செல்ல முடியவில்லை. இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார். நாளை நடைபெறும் தொழிலாளர் தினவிழாவில் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.

அண்ணாமலை தரிசனம்
இந்நிலையில் தான் இன்று இலங்கை சென்ற அண்ணாமலை, நுவேரா எலியா மாவட்டத்தில் உள்ள சீதை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்தியா-இலங்கை நாடுகளின் வரலாறு மற்றுமு நாகரீகம் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதாக அவர் கூறினார். டுவிட்டரில் அவர் கூறியதாவது:

ஒரேநேர்கோட்டில் பயணம்
‛‛இந்தியா மற்றும் இலங்கையின் வரலாறு மற்றும் நாகரீகம் ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ளது. கொழும்பிலிருந்து 182 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நுவேரா எலியா மாவட்டத்தில் இருக்கும் சீதா எலியாவில் உள்ள சீதை அம்மன் கோவில் இதை உறுதிப்படுத்தி உள்ளது. இங்கு தான் சீதா மாதாவை ராவணன் சிறைபிடித்து அடைத்தார். பின்னர் இவ்விடத்தில் இருந்து பகவான் அனுமன் சீதையை காப்பாற்றினார். ராமர், சீதை, லட்சுமண் மற்றும் அனுமனின் சிலைகள் கொண்ட இந்த அழகிய கோவில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படும் இந்திய வம்சாவளி தமிழர்களால் இந்த கோவில் நிர்வகிக்கப்படுகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியை பார்வையிட வாய்ப்பு
இந்த தரிசனத்தின்போது சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் மற்றும் பலர் உடனிருந்தனர். இலங்கையின் இந்த சுற்றுப்பயணத்தின்போது பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை அண்ணாமலை பார்வையிட உள்ளார். இலங்கை மக்களின் துயரங்கள் உள்பட பல செயல்களை பார்வையிட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விளக்குவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications