இலங்கைக்கு 50 டன் அரிசியை அனுப்பி வைத்த சீனா.. அதிகரிக்கும் நெருக்கம் - இந்தியாவுக்கு ஆபத்தாகுமா?
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அந்நாட்டுக்கு 50 டன் அரிசியை சீனா அனுப்பி வைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியதில் இருந்து இலங்கைக்கு அதிகம் உதவிய நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சீனா அந்த இடத்தை பிடிக்க முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.
இலங்கையுடன் சீனாவின் நெருக்கம் அதிகரிப்பது, இந்தியாவுக்கு பல வகைகளில் சிக்கல்களை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்தம்பித்து போன இலங்கை
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு, தவறான பொருளாதாரக் கொள்கைகள், சீனா மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளிடம் இருந்து வரைமுறையில்லாமல் கடன் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை பொருளாதார அதல பாதாளத்துக்கு சென்றது. இதனால் அங்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலை கூட கடுமையாக உயர்ந்தது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் ஆகிவற்றின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் போராட்டம் வெடித்ததால் ஆட்சியை விட்டு ராஜபக்ச குடும்பம் தலைமறைவானது. பின்னர், அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

விலகிய சீனா.. உதவிய இந்தியா..
இவ்வாறு இக்கட்டான சூழலில் சிக்கிய இலங்கைக்கு ஆரம்பம் முதல் இந்தியா தான் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நிதி கொடுப்பது, உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்களை அனுப்பி வைப்பது போன்ற உதவிகளை இந்தியா தாமாக முன்வந்து இலங்கைக்கு செய்தது. அதே சமயத்தில், சீனாவோ இலங்கையை கைவிட்டது போல விலகி நின்றது. மேலும், தான் கொடுத்த கடனை கேட்டு இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்தியாவுடன் நெருக்கம் - சீனாவுக்கு உறுத்தல்
இந்நிலையில், தொடர்ந்து உதவிக்கரம் நீட்டியதால் இலங்கையும் இந்தியாவுடன் அதிகம் நெருக்கம் காட்ட தொடங்கியது. இது சீனாவுக்கு சிறு அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஆசியாவிலேயே சீனாவுக்கு ஓரளவுக்கு நிகராக உள்ள நாடு இந்தியா மட்டுமே. இதன் காரணமாக, இந்தியாவுடன் ஒருவித மோதல் போக்கையே சீனா கடைப்பிடித்து வருகிறது. மேலும், இந்தியாவின் லடாக், அருணாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளை கைப்பற்றும் முனைப்பிலும் சீனா இருக்கிறது. இதனால் அண்டை நாடுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி அவற்றை கைக்குள் போட்டு, இந்தியாவுக்கு நெருக்கடியை தர சீனா முயற்சித்து வருகிறது. அதன்படி, இலங்கையில் ஒரு கப்பல் தளத்தை சீனா அமைத்துள்ளது. பாகிஸ்தானிலும் தனது ராணுவத் தளவாடங்களை சீனா அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி
இந்த சூழலில், இலங்கை உடனான தனது நெருக்கம் சமீபகாலமாக குறைந்து வருவதை உணர்ந்த சீனா, அதனை புதுப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக அந்நாட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு 1000 டன் அரிசியை சீனா அனுப்பி வைத்தது. அந்த வகையில், தற்போது 500 டன் அரிசியை தற்போது மீண்டும் அனுப்பியுள்ளது. இந்த 500 டன் அரிசி மூட்டைகள் கொழும்பு நகரை இன்று சென்றடைந்துள்ளன. இலங்கையுடன் சீனா காட்டும் இந்த திடீர் நெருக்கம் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications