இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு இல்லை- இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுப்பு
கொழும்பு: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா தலையிட்டுள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை இலங்கைக்கான இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியால் ஜனாதிபதி பதவியை கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரணில் விக்கிரமசிங்கே ,டலஸ் அழகப்பெருமா, அனுரா குமார திசநாயக்க இருந்தனர். இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வென்று புதிய ஜனாதிபதியாகி உள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகப்பெருமாவை ஆதரிப்பது என ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதேநேரத்தில் சில தமிழ் எம்.பி.க்கள் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதாகவும் கூறியிருந்தன.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் இந்தியாவின் தலையீடு குறித்தும் எழுதியிருந்தன. அந்த ஊடக செய்திகளில் அதாவது, ஜனாதிபதி தேர்வு தொடர்பான விவாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இரா.சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுமந்திரன் எம்.பி பேசுகையில் டலஸ் அழகப்பெருமாவைத்தான் இந்தியா ஆதரிக்கிறது; அதனால்தான் சஜித் பிரேமதாசவும் டலஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்றார். மேலும் இலங்கைக்கான இந்திய தூதரை சுமந்திரன் அந்தக் கூட்டத்திலேயே செல்போனில் அழைத்து இந்தியாவின் நிலைப்பாட்டை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என பகிரங்கமாகக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை இலங்கை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
Recommended Video
இதனை நேற்றே இலங்கைக்கான இந்திய தூதர அதிகாரிகள் மறுத்திருந்தனர். இன்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திட்டவட்டமாக மறுத்து பதிவிட்டுள்ளது. அப்பதிவில், இலங்கை ஜனாதிபதி தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிட்டதாக கூறப்படுவது ஆதாரமற்றது. அதனை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். இது தொடர்பான செய்திகள் அனைத்தும் கற்பனையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications