"சமூக நீதி காவலர் முதல்வர் ஸ்டாலின்.." நாடாளுமன்றத்தில் நெகிழ்ந்த மனோ கணேசன்.. இலங்கை வர அழைப்பு
கொழும்பு: தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் (மலையகத் தமிழர்கள்) இலங்கைக்கு சென்ற 200-வது ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி. பேசியதாவது: இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் பெரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார பிரச்சனையாக இருந்தாலும் சமூக, அரசியல், கலாசார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலைமைக்கு யார் பொறூப்பேற்க வேண்டும்? இந்த நாட்டை 75 ஆண்டுகளாக மாறி மாறி ஆண்டு வந்த அரசுகள்தான் இந்த பிரச்சனைக்கு பொறுப்பு என்கிறோம் தமிழர்கள். தமிழர்கள் தற்போதைய பிரச்சனையை தொடர்ந்து எதிர்கொண்டுதான் இருக்கின்றனர். இது உயிர் வாழும் பிரச்சனை. எங்களது மொழியை பேசும் பிரச்சனை. இத்தகைய தற்போதைய நெருக்கடிக்கு பிந்தைய மாற்றம் நல் மாற்றமாக இருக்க வேண்டும்.
இலங்கை மக்களுக்கு திமுக சார்பில் ரூ1 கோடி நிதி உதவி- எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியம் வழங்குவர்!
தமிழகம் நிதி உதவி
இந்தியாவில் தமிழ் மாநிலம், தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பின்வரும் அறிவிப்பை செய்துள்ளார். இலங்கையில் வாடும் அனைத்து மக்களுக்குக்குமான நிவாரண உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதை முன்னெடுப்பதற்காக ஒன்றிய அரசின் அனுமதியையும் இலங்கை அரசின் ஒப்புதலையும் அவர் கேட்டு பெற்றுள்ளார். ஆளும் கட்சியான திமுக ரூ1 கோடி நிதி உதவி கொடுத்துள்ளது. அதிமுக ரூ50 லட்சம் கொடுத்துள்ளது. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியம் கொடுத்துள்ளனர்.இன்னமும் தொடர்ந்து கொடுத்து கொடுக்கின்றனர்.
ஸ்டாலினுக்கு அழைப்பு
இதனைப் பார்க்கும் போது எங்களுக்கு மனம் நெகிழ்கிறது. ஒட்டுமொத்த இலங்கையருக்கும் உதவ தீர்மானித்து, நம் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே; யாவரும் கேளீர்" என்ற கூற்றை மெய்ப்பித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வரின் சமூக நீதி கொள்கை, அனைத்து மாநிலங்களையும் சென்றடைகிறது. இலங்கையில் தமிழக வம்சாவளியினர் நிலைமைதான் மோசமாக விளிம்பு நிலையில் உள்ளது. தமிழக முதல்வரின் சமூக நீதி கரம் தமிழக வம்சாவளியினரையும் அரவணைக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலினை சமூக நீதி காவலராக போற்றுகிறோம். எதிர்வரும் வருடம் தமிழக வம்சாவளியினர் இலங்கை வந்து 200 ஆண்டுகளாகிறது. இது தொடர்பான விழாவில் முதல்வர் ஸ்டாலின் பிரதம விருந்தினராக பங்கேற்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் வாயிலாக அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு மனோ கணேசன் கூறினார்.
இலங்கை கூட்டாட்சி
இலங்கை நாடாளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி. பேசியதாவது: இலங்கைக்கு நிவாரணத்தை வழங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இலங்கையில் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வு ஏற்பட உதவியளிக்க வேண்டும். இலங்கை இன்று வரலாற் றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாரிய பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இனவாதம் போகட்டும்
இந்தநிலையில் 74 வருட அனுபவத்தைக் கொண்டு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னையை தீர்த்துவைப்பதற்கான எநத முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. போரின் பின்னர் 13 வருடக் காலத்தில்கூட வடக்கு-கிழக்கு கடல் ரீதியான பொருளாதாரம் அனைத்து அரசாங்கங்களினா லும் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தம் மீண்டும் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறப்படுகின்ற நிலையில் அது நடைமுறையில் இருந்த போதும் பல கோடி ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டன. இனவாதத்தை இந்த நாடு என்று கைவிடுகிறதோ அன்றே நாட்டுக்கு விடிவுக்கிடைக்கும். எதிர்க்கட்சியின் சார்பில் உரையாற்றியவர்கள் சர்வதேச நன்கொடையாளர்களின் மாநாட்டை நடத்த கோரிய போதும், புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியை பெற்றுக் கொள்வதில் பின்னிற்கிறார்கள். இவ்வாறு கஜேந்திரன் எம்.பி. கூறினார்.