நடுக்கடலில் பயங்கரம்- இலங்கை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- கடற்படை தீவிர விசாரணை!
கொழும்பு: இலங்கை கடற்பரப்பில் நடுக்கடலில் அந்நாட்டு மீனவர்கள் மீது வெளிநாட்டு படகில் இருந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படை கைது செய்வதும் சிறைகளில் அடைப்பதும் சுட்டுப் படுகொலை செய்வதும் 40 ஆண்டுகளாக நீடிக்கும் துயரம். சில நேரங்களில் தமிழ்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை இலங்கை கடற்படை வீசி தாக்குதல் நடத்துவதும் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத அளவுக்கு இலங்கை கடற்படை நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த பிரச்சனையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஆதங்கம். இது தொடர்பாக அண்மையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டு மீனவர்கள் கைகளில் கையெறி குண்டுகளை கொடுத்து அனுப்புவோம் என கூறியிருந்தார். இது விவாதப் பொருளாகி இருந்தது.
இந்நிலையில் இலங்கையின் காலி கடற்பரப்பில் அந்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வெளிநாட்டு படகு ஒன்றின் மீது இலங்கை மீனவர்களின் படகு மோதியது. இதனையடுத்து வெளிநாட்டு படகில் இருந்த நபர்கள், இலங்கை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் தீக்காயமடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது.
காலி கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது இந்தோனேசிய மீன்பிடி படகு எனவும் கூறப்படுகிறது. இத்தாக்குதல் இலங்கை மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications