மோடி எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.. விரைவில் இந்தியா வருவேன்.. நெருக்கடியை சமாளிக்க ரணில் பிளான்!
கொழும்பு: இந்திய பிரதமர் மோடி எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து பேச இந்தியா வர உள்ளதாகவும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
அன்னிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி
இதனால், பெட்ரோல், டீசல் உள்பட மருந்து பொருட்கள் என சகலத்திற்கும் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடும் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராக கொதித்தெழுந்தனர். மக்கள் கிளர்ச்சிக்கு அஞ்சி ராஜபக்சே சகோதரர்கள் அதிகாரத்தில் இருந்து விலகினர். இதையடுத்து தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே இருந்து வருகிறார்.

ரணில் விக்ரமசிங்கே
இலங்கை கடும் நெருக்கடியில் தவித்த போது அந்த நாட்டுக்கு கடன் உதவியை இந்தியா வாரி வழங்கியது. நெருங்கிய நட்பு நாடாக காட்டிக்கொள்ளும் சீனா, பெரிய அளவில் உதவி செய்யாமல் ஒதுங்கி கொண்டது. இந்தியா அத்தியாவசிய பொருட்களையும் அனுப்பி இலங்கையின் நெருக்கடி கட்டத்தில் பெரும் உதவி செய்தது. தற்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது நட்பு நாடுகளுக்கு சென்று நிதி உதவி கோரி வருகிறார்.

இந்தியா வர திட்டம்
சமீபத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே விரைவில் இந்தியா வர திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:-

மோடி எப்போதும் ஆதரவாக இருக்கிறார்
''நமது நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து அண்டை நாடான இந்தியாவுடன் பேசி வருகிறோம். நமது நாட்டில் நிலவும் சூழலை தெரிவிப்பதற்கு இந்தியா வர விரும்புவதாக பிரதமர் மோடியை ஜப்பானில் சந்தித்த போது தெரிவித்தேன். இந்திய பிரதமர் மோடி நமக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார். நெருக்கடியான கட்டத்தில் நமக்கு (இலங்கைக்கு) இந்தியா ஆதரவு அளித்தது. இந்த உதவியை நான் பாராட்டுகிறேன். அதேவேளையில் சீனாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டோம். முன்பு இருந்தே நமக்கு சீனா ஆதரவாக இருந்து வருகிறது'' என்றார்.

ஜப்பான் சம்மதம்
தொடர்ந்து அவர் கூறுகையில், ''சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது. 16-ந் தேதி தொடங்க உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும். பழங்காலத்தில் இருந்தே சீனா நமக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த சிக்கலான நேரத்திலும் ஆதரிக்கும் என்று நம்புகிறேன். சமீபத்தில், ஜப்பான் சென்று திரும்பினேன். ஜப்பானும் இதில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளது'' என்றார்.











Click it and Unblock the Notifications