மருந்துகளும் காலி! மோசமடையும் இலங்கை நிலை... அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்
கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் கூட இல்லை என்று கூறி மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது இது அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்து இருக்கிறது.
உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

போராட்டத்தில் வெடித்த வன்முறை
அதே நேரம் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளன. கடந்த 31 ஆம் தேதி இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே பதவி விலகக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனை தொடர்ந்து இலங்கையில் அவசர நிலையும், தலைநகர் கொழும்புவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை.

நிறுவனங்கள் மூடல்.. வேலையிழப்பு
பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

தீவிரமாகும் போராட்டங்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில 10 ஆண்டுகளில், தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள், தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எரிந்துவிட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி இருக்கின்றனர்.

மருத்துவர்கள் போராட்டம்
இதனிடையே தற்போது இலங்கையில் மருத்துவர்களும் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனை முன்பாக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை குடிமக்களுக்கு வாழ்வதற்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உரிமை உள்ளதால் மருந்து வாங்குவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதேபோல் டி.எச்.அனுராதபுரா, கேகல்லே மருத்துவமனை, தம்ப்ளா மருத்துவமனை முன்பாகவும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications