அமைதியாக இருங்க.. அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கலாம்: இலங்கை அதிபர் வேண்டுகோள்
கொழும்பு: அண்டை நாடான இலங்கையில் வன்முறை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச புதிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்
அண்டை நாடான இலங்கையில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
கொரோனாவுக்கு பின் சுற்றுலாத் துறை இன்னும் முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும் அப்படியே அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
இதுதான் முதுகெலும்பு! ஒரு விக்கெட் காலி.. அதிபர், பிரதமரை துணிச்சலாக சீண்டும் இலங்கை கிரிக்கெட்டர்ஸ்
பாதிப்பு
இதன் காரணமாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அங்குப் பொருளாதார அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இருந்த போதிலும், பொருளாதாரம் மேம்படவில்லை. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சத்தைத் தொட்டுள்ளது. காய்கறி, பழங்கள் மற்றும் பாலின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இலங்கை மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், இலங்கை நாட்டில் ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்டது. இருந்த போதிலும், பொதுமக்கள் இதை விடுவதாக இல்லை. இலங்கையின் இந்த நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதன் காரணமாக ராஜபக்ச அரசுக்கு உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் வீதிகளில் போராட்டத்திலும் இறங்கினர். முதலில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என ராஜபக்ச பிடிவாதம் பிடித்தார்.
வீடுகளுக்குத் தீவைப்பு
இருப்பினும், இலங்கையில் நிலைமை மோசமடைந்ததால் நேற்றைய தினம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இருந்த போதிலும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. சுமார் 35க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கோரிக்கை
இது தொடர்பாக இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச, "பொதுமக்கள் அனைவரும், எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தவும், அமைதியாக இருக்கவும் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் ஸ்திரத்தன்மையை ஒருமித்த கருத்து மூலம் மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
Recommended Video
ஊரடங்கு நீட்டிப்பு
இலங்கை நாட்டில் ஊரடங்கும் இன்று (மே 11) வரை அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், மக்கள் போராட்டம் ஓயவில்லை இதையடுத்து ஊரடங்கை நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் வன்முறை தொடரும் நிலையில், வரும் மே 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மே 12ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.