முற்போக்காக சிந்தியுங்கள்! சமூக வலைதள தடை தொடர்பாக இலங்கை அரசை விமர்சித்த ராஜபக்சே மகன்!
கொழும்பு: ‛‛சமூக வலைதளங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். இப்போது பயன்படுத்துவதைப் போலவே தேவைப்படும்போது விபிஎன் பயன்படுத்துவேன். இத்தகைய பயன்பாடு சமூக வலைதள முடக்கங்களை பயனற்றதாக ஆக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறினார்.
இலங்கையின் கடன் அதிகரிப்பு, கொரோனா காலத்தில் சுற்றுலா பாதிப்பு உள்ளிட்ட காரணத்தினால் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

போராட்டம்
மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ராஜபக்சேவின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும்படி கோஷமிட்டு ஆக்ரோஷமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கோத்தபய ராஜபக்சே வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இது வன்முறையானது.

ஊரடங்கு அமல்
மக்கள் எழுச்சி தொடர்ந்ததால் இலங்கையில் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று நாடு முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் முடக்கம்
குறிப்பாக சமூக வலைதளங்களில் போராட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு நடந்தது. மேலும் இலங்கை அரசுக்கு எதிராக கருத்துகள் பரிமாறப்பட்டன. இதனால் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா உள்பட பல சமூக வலைதளங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டன. மேலும், ஊரடங்களை மீறி போராட்டம் நடத்துவதை தடுக்க போலீசார், ராணுவத்தினர் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். கோத்தபய ராஜபக்சேவின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

முற்போக்காக யோசியுங்கள்
இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனும், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்சே, சமூக வலைதள முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், முற்போக்காக சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‛‛சமூக வலைதளங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். இப்போது பயன்படுத்துவதைப் போலவே தேவைப்படும்போது விபிஎன் பயன்படுத்துவேன். இத்தகைய பயன்பாடு சமூக வலைதள முடக்கங்களை பயனற்றதாக ஆக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications