இலங்கைக்குள் சீனர்களுக்கு "தனி நாடா"? கொழும்பு துறைமுக நகரத்தால் கொந்தளிப்பு..இந்தியாவுக்கும் ஆபத்து
கொழும்பு: இலங்கைக்குள் சீனர்களுக்கான ஒரு தனிநாடு போல கொழும்பு துறைமுக நகர அதிகாரங்கள் கட்டமைக்கப்படுவது அந்த நாட்டு அரசியலில் பெரும் புயலையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி கொழும்பு துறைமுகநகரம், சீனர்களின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக சென்றுவிட்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பது அரசியல் வல்லுநர்களின் எச்சரிக்கை.
Recommended Video
1980களில் இந்தியாவின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்ட ஒருநாடாக மட்டுமே இலங்கை இருந்தது. இலங்கையில் அமெரிக்கா காலூன்ற முயற்சித்த போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடும் எச்சரிக்கையை பகிரங்கமாக வெளியிட்டார். இதனால் இலங்கை அஞ்சி பின்வாங்கியது.
ஆனால் 1990களில் நிலைமை வேறானது. இந்தியாவின் பிடியில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல விலகிப் போனது. இந்த இடைவெளியை சீனா ஒவ்வொரு படிநிலையாக பயன்படுத்திக் கொண்டே வந்தது. இதன் உச்சமாகத்தான் இன்று இலங்கைக்குள் சீனர்களுக்கான ஒரு தனிநாடு என்கிற நிலை உருவாகிவிட்டது.
கதிர்வீச்சு பொருட்களுடன் அனுமதியின்றி நுழைந்த சீனா கப்பல்- வெலவெலத்து போன இலங்கை
கொழும்பு துறைமுக நகரம்
இலங்கையில் கொழும்பு துறைமுக நகரை சீனா உருவாக்கி வருகிறது. சீனாவின் நிதி உதவியுடன் சீனர்களால் இந்த துறைமுக நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது இயல்புதானே.. இது எப்படி தனிநாடு என்கிற அளவுக்குப் போகும்? என்கிற கேள்வி இயல்பானது. ஆனால் இலங்கை அரசு அப்படித்தான் நடந்து கொள்கிறது.
சீனாவின் கன்ட்ரோல்?
இலங்கையில் இப்போது நடைபெற்று வரும் அரசியல் விவாதமே கொழும்பு துறைமுகநகரம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்? இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்குமா? அல்லது சீனர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்குமா? என்பதுதான். இலங்கையின் ராஜபக்சே சகோதரர்களைப் பொறுத்தவரையில் சீனா உருவாக்கிய கொழும்பு துறைமுக நகரை முற்று முழுதாக சீனாவின் கட்டுப்பாட்டிலேயே விட்டுவிடுவது என்பதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். இதற்கான அரசியல் சாசன திருத்தங்களில் தீவிரம் காட்டுகின்றனர்.
சிங்களர் அச்சம்
ஆனால் சிங்களரும் தமிழரும் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். சீனாவுக்கான ஒரு சுயாட்சி பிரதேசமாக அல்லது தனிநாடு போலவோ கொழும்பு துறைமுக நகரம் கொடுக்கப்பட்டால் பூகோள அரசியல் பிரச்சனைகளில் இலங்கை பலிகடாவாக்கப்படும் அபாயம் இருக்கிறது; இந்தியாவும் அமெரிக்காவும் நிச்சயம் இதனை ஏற்காமல் இலங்கைக்கு நெருக்கடியை தரும் என்பது சிங்களரின் அச்சம். இதற்காகவே சிங்களர் அபயக் குரல் எழுப்புகின்றனர்.
தமிழர்களின் கேள்வி
தமிழர்களோ, இந்த நாட்டின் பூர்குடிகள் தமிழர்கள். அரசியல் அமைப்பு வழங்கிய அதிகாரங்களுக்காகவே அமைதிவழியில், ஆயுதவழியில் போராடிய தேசிய இனம் தமிழ்த் தேசிய இனம். இந்த மண்ணின் பூர்வகுடிகள் அதிகாரம் கேட்டார்கள் என்பதற்காக அழித்த இலங்கை அரசு, இந்த மண்ணுக்கே தொடர்பில்லாத சீனர்களுக்கு ஒரு தனி ராஜ்ஜியத்தை கொடுப்பது எவ்வளவு அநீதியானது? சர்வதேச சமூகம் இதில் ஏன் பாரமுகமாக இருக்கிறது என்று ஆவேசப்படுகின்றனர்.
இலங்கைக்கு தேவை பாடம்
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு நட்பு நாடு என ஒருகரம் நீட்டிக் கொண்டே சீனாவை ஆரத்தழுவிக் கொண்டு நிற்கிறது. இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சீனாவுக்கான செங்களம்பத்தை இலங்கை விரித்து கொண்டே வருகிறது. இப்போது சீனாவுக்கான ஒரு தனிநாடு அளவிலான அதிகாரம் கொண்ட துறைமுக நகரை கொழும்பிலேயே இலங்கை அரசு கொடுக்க முன்வந்திருக்கிறது. இலங்கைக்கான சரியான பாடத்தை கற்பிக்க வேண்டிய நெருக்கடியில் இந்தியாவுக்கு உருவாகி இருக்கிறது என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்து.