நிலைமை மோசம்.. வீட்டிலுள்ள தங்கத்தை விற்பனை செய்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இலங்கை மக்கள்
கொழும்பு: இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
பொதுமக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த அங்கு அவசரநிலை பிரகடனம் அமல் செய்யப்பட்டு வாபஸ் பெறப்பட்டது. தற்போதும் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டுகொள்ளாத ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை கைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. பொருளாதார நெருக்கடியை உடனடியாக சமாளிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே எதையும் கண்டுகொள்வதாக இல்லை.

மோசமான நிலை அதிகரிக்கலாம்
இதனால் இலங்கையில் இன்னல்படும் மக்களுக்கு இந்தியா சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடனும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா உதவி செய்தாலும் கூட இந்த மாதத்தில் அவை தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது. இதனால் பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமான நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.

தங்கத்தை விற்கும் மக்கள்
தற்போதே இலங்கை மக்கள் மருந்து, மாத்திரை, உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர். வழக்கத்தை விட பலமடங்கு அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதால் அவர்களுக்கு அதிக செலவு ஏற்பட்டு வருகிறது. கையில் பணம் இல்லாததால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இலங்கை மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

வியாபாரிகள் சொல்வது என்ன
இதுபற்றி கொழும்புவில் உள்ள தங்கநகை உற்பத்தியாளரான மொக்சின் கூறுகையில், ‛‛நாட்டில் மக்கள் தங்கத்தை அதிகமாக விற்பனை செய்து வருகின்றனர். தினசரி வாழ்க்கையை நடத்த பணம் இல்லாத நிலையால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்'' என்றார். தங்க நகை வியாபாரி சில்வா கூறுகையில், ‛‛இலங்கை இதுவரை இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்தது இல்லை. இலங்கை கரன்சி மதிப்பு எதிர்பாராத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தங்கத்தை வாங்குபவர்களை விட விற்பனை செய்வோர் அதிகரித்துள்ளனர்.

விலை எவ்வளவு
இன்று 24 காரட் தங்கத்தின் விலை இலங்கை மதிப்பில் 2,05,000 ஆகவும், 22 காரட் தங்கத்தின் மதிப்பு 1,85,000 ஆகவும் உள்ளது. தற்போதைய நெருக்கடியில் அமெரிக்க டாலர் மதிப்பின் படி, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு முன்பு 100 ரூபாய் வித்தியாசத்தில் ஏறி இறங்கிய தங்கத்தின் விலை பொருளாதார நெருக்கடியால் ரூ.10 ஆயிரம் வித்தியாசத்தில் ஏறி இறங்குகின்றன'' என்றார்.

இலங்கை கரன்சி மதிப்பு சரிவு
இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சரிந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு 315 என்ற அளவில் இருந்தது. இது வரும் நாட்களில் இன்னும் மோசமாகலாம் எனவும், இதனால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications