இலங்கையில் ஊரடங்கு ஏன்? அரசு தரப்பில் விளக்கம்! ரூ.3.90 கோடி சொத்துகள் சேதம் என தகவல்!
கொழும்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஏன் என்பது குறித்து இன்று இலங்கை அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் போராட்டத்தால் ரூ.3.90 கோடி சொத்துகள் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அங்கு அவசர நிலை அமலில் உள்ளது. மேலும் இன்று மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் இன்று இலங்கையில் பெரியளவில் போராட்டம் நடக்கவில்லை. கொழும்புவில் மட்டும் எதிர்க்கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார், ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் அமலில் உள்ள ஊரடங்கு தொடர்பாக இலங்கை அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமைதிக்காக அமல்
நாட்டில் அமைதியையும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பேணவும், பொது, தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்துக்காகவே அவசர கால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான சுதந்திரத்தை போலவே நாட்டில் அமைதி நிலைநாட்டவும், அரசு, தனியார் சொத்துக்களை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் முக்கிய பணிகளாகும்.

உறுதிமொழி வாயிலாக அங்கீகரிப்பு
பேச்சு, கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்குமான சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தி ஊக்குவிப்பதை அரசு உறுதிமொழி வாயிலாக அங்கீகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடைமுறை ரீதியாக அதை அரசு உறுதியும் படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தையில் தீர்வு
தற்போதைய அதிபர் பதவிக்கு வந்த பின் எந்தவொரு அமைதியான ஆர்ப்பாட்டம் அல்லது கண்டன பேரணிக்கும் போலீஸ் தாக்குதல், கண்ணீர் புகை தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை அதிபர் செயலகத்துக்கு அழைத்து பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளும் வழங்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன போராட்டங்களுக்கென அதிபர் செயலகத்துக்கு அருகில் வேறானதொரு இடமும் ஒதுக்கப்பட்டது.

சேத மதிப்பு எவ்வளவு
ஆனால் கடந்த மார்ச் 31ல் மிரிஹானை பிரதேசத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு சிலரால் வன்முறை உருவாக்கப்பட்டது. பொது சொத்துகள், தனியார் சொத்துக்கள் சேதம் ஏற்படுத்தப்பட்டது. சிலர் காயமடைந்தனர். சேதம் விளைவிக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு 39 மில்லியன் (ரூ.3.9 கோடி) ரூபாய்களாகும். இதனால் தான் அவசரகாலம் மற்றும் ஊரடங்கு சட்டம் பொது அமைதியை பேணவும், அரசு, தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications