ஈழத்தமிழரின் துயரம்.. இலங்கையில் கஞ்சி வழங்கிய மக்கள்..துவங்கியது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்
கொழும்பு: இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று முதல் துவங்கியது. முதல் நாளான இன்று கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் தனிநாடு கோரி போராட துவங்கினர். இது இலங்கையின் உள்நாட்டு போராக கூறப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த போர் நடந்தது.
2007 காலக்கட்டத்தில் தான் இந்த போர் தீவிரமடைந்தது. அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே ஈவு ஈரக்கமின்றி ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கை ராணுவத்தின் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர். இந்த போர் 2009 மே 18ல் முடிவுக்கு வந்தது.
இந்த போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையின் முள்ளிவாய்க்காலில் ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இங்கு திரண்டிருந்த மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது தடை செய்யப்பட்டது. இதனால் அவர்கள் கஞ்சி காய்த்து மட்டுமே குடித்தனர். கஞ்சிக்கு பாத்திரம் ஏந்தி வரிசையில் நின்றபோதும் இலங்கை ராணுவம் துப்பாக்கியால் சுட்டு பலபேரை கொன்ற துயர சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில் தான் மரணமடைந்த ஈழத்தமிழர்களை நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்காலில் ஆண்டுதோறும் மே 18ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட உள்ளது. இது தமிழகம் மட்டுமின்றி உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒரு வாரம் வரை அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி முதல் நாளான இன்று கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் சாப்பிட உணவு இன்றி தவித்த மக்கள் கஞ்சி மட்டுமே காய்ச்சி குடித்தனர். இதை நினைவுப்படுத்தும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்லவும் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தனித்தனியாகவும், அமைப்பு ரீதியாகவும் இன்று கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வழங்கினர்.