"இலங்கையை மீட்டெடுக்க ஒருவழிதான் இருக்கிறது, இல்லையென்றால்".. உருக்கமாக பேசிய ரணில்!
கொழும்பு: பொருளாதார நெருக்கடி எனும் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கையை மீட்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியத்தின் (IMF) ஆதரவை கோருவதை தவிர நமக்கு வேறு வழியில்லை எனக் கூறிய ரணில் விக்ரமசிங்கே, இது நடக்காவிட்டால் இனி நம்மால் எழுந்து கூட நிற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இலங்கையை மீண்டும் மீட்டெடுத்தே தீருவேன் என சபதமிட்டு அதிபரான ரணில் விக்ரமசிங்கே, இவ்வாறு நம்பிக்கையற்ற வார்த்தைகளை பேசுவது இதுவே முதன்முறையாகும்.

நிலைக்குலைந்த இலங்கை
சிறிய நாடாக இருந்தாலும் தன்னிறைவு கொண்ட நாடு என அறியப்பட்ட இலங்கை, தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தவறான பொருளாதாரக் கொள்கை, வரைமுறையின்றி கடன் வாங்கியது, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இலங்கை இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பஞ்சத்தால் அங்கு பெரும் உள்நாட்டு கலவரம் மூண்டு, அரசப் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பம் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பியோடியது.

கைவிட்ட நாடுகள்..
இதையடுத்து, அரசாங்கமே இல்லாத நாடாக மாறிய இலங்கையை வழிநடத்த, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்படியாவது இலங்கை மீட்டெடுத்தே தீருவேன் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ரணில். ஆனால், தான் நினைத்தது போல இலங்கையை மீட்டெடுப்பது சாதாரண காரியமல்ல என்பதை சில மாதங்களிலேயே அவர் உணர்ந்தார். ஏனெனில், ஏற்கனவே கடன் சுமையிலும், திவாலாகும் நிலைமையிலும் இருக்கும் இலங்கைக்கு மேலும் கடன் கொடுக்க எந்த நாடுகளும் தயாராக இல்லை. ஆனால் இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.

"இலங்கை நிலைமை இன்னும் மோசமாகும்"
இந்நிலையில், கொழும்பில் நேற்று நடைபெற்ற வர்த்தக யூனியன்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ரணில் விக்ரமிங்கே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது: இலங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு அனுபவித்து வந்த வசதிகளும், வளங்களும் ஒன்றுமில்லாமல் போய்விட்டன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பொருளாதார நெருக்கடியால் துவண்டு கிடக்கின்றன. பொருளாதார நெருக்கடியின் முழு பின்விளைவுகளையும் இப்போதுதான் சந்திக்க தொடங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமாகவே இருக்கும்.

"ஒரே ஒரு வழிதான் இருக்கிறது"
இந்த சூழ்நிலையில், இலங்கை எப்படி பொருளாதார நெருக்கடியில் சிக்கியது; எந்தெந்த விஷயங்களை தவறாக கையாண்டோம் என்பது பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. நடந்தது நடந்துவிட்டது. இனி அதில் இருந்து மீண்டெழுவது குறித்துதான் பேச வேண்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையை மீட்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. சர்வேதச நிதியத்திடம் உதவி கோருவது தான் அது. அதுவும் நடக்கவில்லை எனில், இலங்கை மீள முடியாது. அதேபோல, கடன் மறுசீரமைப்பு திட்டங்களையும் உடனடியாக நாம் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார்.












Click it and Unblock the Notifications