எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
கொழும்பு : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருந்த 9 நாகை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 10ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த திரிகோணமலை நீதிமன்றம் தமிழக மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு!
முதல்வர் கோரிக்கை
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரிரு நாட்களுக்கு முன்பு கூட கடிதம் எழுதினார். ஆனாலும், மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.
தொடரும் மீனவர்கள் கைது
கடந்த 10ஆம் தேதி கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த காமராஜ், பூவரசன், அன்பு, செல்லையன், பாலு, செல்லதுரை, முருகானந்தம், ஸ்டீபன் முருகன் ஆகிய 9 பேரையும் கைது செய்துனர்.
கைதான மீனவர்கள்
அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
துப்பாக்கி முனையில் கைது
இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 10 மீனவர்கள் கடந்த 20ஆம் தேதி நள்ளிரவு நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது முல்லைத்தீவு வுபகுதியில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் மீனவர்களை கைது செய்தனர்.
மீண்டும் 10 மீனவர்கள்
படகில் இருந்த அக்கரைப்பேட்டை கலையரசன், சஞ்சிகண்ணு, ஆனந்த், கமலநாதன், ராஜா, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த ரீகன், பிரவீன் ஆகாஷ் உள்ளிட்ட 10 மீனவர்களை கைது செய்து, அவர்களது விசைப்படகையும், படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 10 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக திருகோணமலை சிறையில் அடைத்தனர்.
விடுதலை
பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களுக்கு செப்.6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்களை திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது.