சிறுபான்மையினரை அடக்கி ஆள முயல்வது நாட்டை பலவீனப்படுத்தும்.. இலங்கை மாஜி அதிபர் சந்திரிக்கா அட்வைஸ்
கொழும்பு: சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது என்பது நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கா கூறினார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலையில் மக்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். தற்போது இலங்கயைில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இலங்கையில் அரசியல்வாதிகள் மாறியிருந்தாலும் கூட தற்போதைய சூழலில் மக்களின் வாழ்வாதாரம் இன்னும் சீராகவில்லை. தொடர்ந்து உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு, மின்வெட்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும், அதிபருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ‛தி இந்து' நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
வரலாறு காணாத ஒற்றுமை! இலங்கையில் விரட்டப்பட்ட ராஜபக்சேக்கள்! மாஜி அதிபர் சந்திரிக்கா பெருமை
இந்தியாவுக்கு நன்றி
ராஜபக்சேக்களின் ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் இந்தியா எங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இதற்கு நான் தனிப்பட்ட முறையில் மிகவும் நன்றியுள்ளவராக இருக்க விரும்புகிறேன். இலங்கையில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அணிசேரா கொள்கையை கடைப்பிடித்தோம். ஆனால் ராஜபக்சேக்கள் குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தனர். இது பிற நாடுகளின் இலங்கை மீதான பார்வையை விலக செய்தது. இதனால் தற்போது பிரச்சனையை சந்தித்து வருகிறோம்.
அனைவரும் முக்கியம்
தற்போதைய சூழலில் இலங்கையில் முதலீடு செய்ய அனைத்து நாட்டினரும் நமக்கு அவசியம். நாம் அவர்களை வரவேற்க வேண்டும். நாடு திவாலாக இருப்பதால் முன்பை விட இது மிகவும் முக்கியமானது. தற்போதைய சூழலில் நமக்கு பிற நாடுகளின் நிதி பங்களிப்பும், அவர்களின் திறமையும் அவசியமாகும். இந்த ஆண்டு சுமார் 1,40,000 இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது மிகவும் துயரமானது. இருப்பினும் அவர்கள் திரும்பி வருவார்கள்.
கவனம் செலுத்தாத ராஜபக்சேக்கள்
இலங்கையில் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என ராஜபக்சேக்கள் கூறினர். ஆனால் அதற்கு முன்பு நாம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சமாக உணவு பொருட்கள், தொழில்களுக்கு பொருட்கள் உற்பத்தியிலாவது முன்னேறி இருக்க வேண்டும். இது இன்றி இறக்குமதியை கட்டுப்படுத்துவது என்பது நடைமுறைக்கு ஒத்துவராது. இதில் ராஜபக்சேக்கள் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இதுவும் நாட்டின் நெருக்கடி நிலைக்கு முக்கிய காரணமாகும்.
கூட்டு பலவீனம்
இலங்கையில் 70 சதவீதம் சிங்கள பவுத்தர்கள் உள்ளனர். 30 சதவீதம் பேர் சிறுபான்மையாக உள்ளனர். சிறுபான்மையினர் என்று பார்த்தால் இந்த அளவு அதிகம். நமக்கு அருகே ஒரு பெரிய அண்டை நாடு உள்ளது, மேலும் அந்த நாட்டுடன் பழங்காலத்திலிருந்தே எங்களுக்கு மோதல் இருந்தது. மேலும் இந்திய மன்னர்களால் 52 முறை படையெடுக்கப்பட்டோம். பெரும்பான்மையினராக உள்ளவர்கள் சிறுபான்மையினரை அடக்கி ஆழ முயற்சிப்பது என்பது ஒரு நாட்டின் கூட்டு பலவீனமாக உள்ளது. இத்தகைய நடைமுறையை ஒருபோதும் இருக்க கூடாது. ஒருநாட்டில் பெரும்பான்மையினராக உள்ளவர்கள் தங்கள் நாட்டில் குறிப்பிட்ட அளவு உள்ள சிறுபான்மையினர் மத்தியில் தங்களை அதிகாரம் படைத்தவர்கள் என்று காட்ட அனைவரையும் வீழ்த்த முயற்சி செய்கின்றனர். இது நமது தேசத்தின் கூட்டு பலவீனம். இனக்கலவரத்தின் வேர்களில் இத்தகைய மனநிலையும் ஒன்றாக உள்ளது.
மீண்டும் அரசியல் இல்லை
நான் மீண்டும் அரசியலுக்கு வருவது இல்லை. நான் நாட்டுக்கு செய்தது போதும். பெரும்பாலான இலங்கை அரசியல்வாதிகளைப் போலல்லாமல் எனக்கு வாழ்க்கையில் வேறு பல ஆர்வங்கள் உள்ளன. அரசியலில் சாதிக்க விரும்புவோர்களுக்கு கலந்துரையாடுகிறேன். ராஜபக்சேக்களை விரும்பாத அரசியல் வாதிகள் என்னை சந்தித்து ஆலோசனை கேட்டனர். நான் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன். அரசியல் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் நல்ல தலைவர்களாக இளைஞர்களை உருவாக்கும் நோக்கத்தில் பண்டாரநாயக்கா சர்வதேச ஆய்வு மையம் எனும் அகாடமியை துவங்கி உள்ளேன். இதற்கு எனது சொந்த நிதியை பயன்படுத்தி வருகிறேன். நண்பர்களுடன் கலந்துரையாடி புத்தகம் வாசிப்பு, சினிமா, நாடகம் பார்த்து மகிழ்கிறேன். நான் அதிபராக இருந்தபோது போதியளவு படிக்க முடியாத சூழல் இருந்தது. இதனால் விரக்தியடைந்தேன். அதனை இப்போது சரிசெய்து கொள்கிறேன். தீவிர அரசியலில் இருந்து விலகிய பிறகு கடந்த 3 ஆண்டுகளில் இந்திய எழுத்தாளர்கள் உள்பட பலரது புத்தகங்களை படித்துள்ளேன். ஓவியங்கள் வரைகிறேன். நடனம் கற்றுள்ளேன். கவிதை எழுதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
யார் இந்த சந்திரிக்கா?
சந்திரிக்கா பண்டார நாயக குமாரதுங்காவின் தந்தை பெயர் பண்டாரநாயக்கா. இவர் இலங்கையின் பிரதமராக இருந்தார். அதன்பிறகு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சந்திரிக்காவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரானார். பெற்றோர் அரசியல் பின்புலம் கொண்டிருந்தததால் சந்திரிக்காவும் அரசியலில் ஈடுபட்டார். சுதந்திரக் கட்சியில் இணைந்து செயல்பட்டார். இவரது கணவரான நடிகர் விஜய குமாரணதுங்காவும் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு 1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிக்கா பிரதமரானார். அதன்பிறகு அதிபராக செயல்பட்டார். இந்த வேளையில் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடைந்தது. மேலும் புலிகள் இயக்கத்தின் கொலை முயற்சியில் இருந்து தப்பித்த இவர் தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.