பாலியல் துன்புறுத்தலில் சிக்கும் மனநலன் பாதிப்புடையோரிடம் வாக்குமூலம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
மனநலன் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுரா உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க மறுப்பு- அமைதியை நிலைநாட்ட மாநில அரசு உச்சநீதிமன்றம் அறிவுரை
சென்னையைச் சேர்ந்த மனநலன் பாதிக்கப்பட்ட மாணவி
சென்னையை சேர்ந்த 21வயது மாணவி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவியின் நிலையை தனக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர், புகார் அளித்த தாய்
இதுகுறித்து மாணவியின் தாய் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது, தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனைப் மற்றும் மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் மாணவி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி மாணவியின் வாக்குமூலத்தை சைதாப்பேட்டை 18 வது பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பதிவு செய்தார்.
தகுந்த நபர் இல்லாமல் வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்ட்ரேட் உத்தரவு ரத்து
மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவி என்பதை கணக்கில் கொண்டு சிறப்பு மொழிபெயர்ப்பாளர் யாரையும் பயன்படுத்தாமல் மாஜிஸ்திரேட் நேரடியாக மாணவியிடமே பெறப்பட்ட வாக்குமூலம் குற்றவாளிக்கு சாதகமாக கூடும் என்பதால் மாஜிஸ்திரேட் பதிவு செய்த வாக்குமூலத்தை ரத்து செய்யக்கோரி மாணவியின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மாணவியிடம் ஏற்கனவே மாஜிஸ்திரேட் பெற்ற வாக்குமூலத்தை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, மீண்டும் புதிதாக வாக்குமூலத்தை பதிவு செய்ய வேறு ஒரு மாஜிஸ்திரேட்டை நியமிப்பது தொடர்பாக தலைமை குற்றவியல் நடுவரை அணுக காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
பெண் மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்ட பெண் இயல்பாக பழகும் நபர் மூலம் வாக்குமூலம்
பாதிக்கப்பட்ட மாணவி நடந்தவற்றை விவரிக்க ஏதுவாக, வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதி, மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சிறப்பு மொழிபெயர்ப்பாளரோ அல்லது அந்த மாணவியின் ஆசிரியரோ யார் அந்த மாணவிக்கு சௌகரியமாக இருப்பார்களோ அவர்கள் மாணவி வாக்குமூலம் அளிக்கும் போது மாஜிஸ்திரேட்க்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.