விசிக+கம்யூனிஸ்டுக்கு குட்பை.. நாடாளுமன்ற தேர்தலில் திமுக+பாஜக கூட்டணி.. சிவி சண்முகம் சொன்ன ஆரூடம்
கடலூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கழற்றிவிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளது என அதிமுகவின் எம்பி சிவி சண்முகம் பரபரப்பாக பேசினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை விரும்பவில்லை என தகவல்கள் பரவும் நிலையில் சிவி சண்முகத்தின் இந்த பேச்சு தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
அதிமுகவில் இரட்டை தலைமை முறை இருந்தது. ஒற்றை தலைமை விவகாரம் எழுந்த நிலையில் முன்னாள் முதல்வர்களான ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு மத்தியில் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக குழப்பம்
தற்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் கூட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் ஓ பன்னீர் செல்வம் மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.

சிவி சண்முகம் பேச்சு
அதிமுகவின் பல்வேறு மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் அணியில் உள்ளனர். இதில் முக்கியமானவர் தான் சிவி சண்முகம். அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்பியுமான இவரது தலைமையில் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கம் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் என்எல்சி நிறுவனத்துக்கு வீடு நிலம் கொடுத்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவி சண்முகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக-பாஜக கூட்டணி
திமுகவினர் பாஜக மற்றும் மத்திய அரசை எதிர்ப்பது போல் நடித்துக் கொண்டு வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவைகளை கழட்டி விட்டுவிட்டு திமுகவும், பாஜகவும் கூட்டணி அமைக்க உள்ளார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. இதனால் தான் அந்த கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாான அதிமுகவும், பாஜகவும் இப்போதும் கூட இணக்கமாகவே உள்ளது'' என கூறினார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி அணியின் முக்கிய நபரான சிவி சண்முகம் இவ்வாறு பேசியுள்ளார். இதனால் பாஜக, அதிமுக இடையே தற்போது சுமூகமான உறவு இல்லை என சில அரசியல் நோக்கர்கள் கூறி வரும் நிலையில் தான் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 25 இடங்களில் வெல்லும் என பேசியிருந்தார். மேலும் முந்தைய தேர்தலில் பாஜகவின் நிலை என்பது வேறாக இருந்தது. தற்போது பாஜக வளர்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்தார். இந்நிலையில் தான் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரன சிவி சண்முகம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி அமையும் என கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications