சீறிய சேகர் பாபு.. "சுரண்டி அழித்த திப்புசுல்தான்".. தீட்சிதர்களுக்காக குதித்த எச்.ராஜா.. ஒரே மோதல்!
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை சார்பாக ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கு கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கோர்ட் விதிகளுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக தீட்சிதர்கள் புகார் வைத்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு புகார்கள், மனுக்கள் வந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்ள அறநிலையத்துறை முடிவு செய்தது. பொது கோவில்களில் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்பதால், அறநிலையத்துறை நேற்றும், இன்று அங்கு ஆய்வு செய்ய முடிவு எடுத்தது.
வருகிறது புதிய சட்டம்: பேஸ்புக், ட்விட்டரில் சிக்கலா? மேல்முறையீட்டு குழு அமைக்க மத்திய அரசு முடிவு!
ஆனால் நேற்று ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளிடம் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்தனர். கோவில் கணக்கு வழக்கு விவரங்களை வழங்க மறுத்தனர்.
ஆய்வு
அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் சார்பாக பேசிய வழக்கறிஞர் சந்திரசேகர், இங்கு ஆய்வு செய்ய அறநிலையத்துறைக்கு அனுமதி இல்லை. தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினர். விதி எண் 26வது பிரிவின்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 2014ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தனி சமயத்தினர் வழிப்பாடு செய்யும் கோவில்களில் இந்து அறநிலையத்துறை ஆய்வு செய்ய முடியாது என்று தீட்சிதர்கள் கூறினார்கள்.
தீட்சிதர்கள்
இந்த கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது. அவர்களின் அனுமதி மூலம் மக்கள் வழிபாடு நடத்துகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என்று தீட்சிதர்கள் தரப்பு வாதம் வைத்து வருகிறது. இந்த ஆய்வு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சிதம்பரம் நடராஜர் கோவில் பொதுக்கோவில் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்கோவில்களில் ஆய்வு நடத்த அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. புகார் வரும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 23, 28ன் படி நாங்கள் ஆய்வு செய்ய முடியும்.
சேகர் பாபு
அந்த கோவிலை நாங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க விரும்பவில்லை. பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். அதை பற்றி விசாரிக்கிறோம். தீட்சிதர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. மடியில் கனமில்லை என்றால் பயப்பட வேண்டியது இல்லை. உண்மையான விவரங்களை தீட்சிதர்கள் தெரிவிப்பதில் என்ன பிரச்சனை. நாங்கள் சட்டப்படி நடக்கிறோம். அவர்கள் சட்டத்தை மதிக்க வேண்டும். அந்த கோவிலில் கண்டிப்பாக ஆய்வு நடக்கும், என்று சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
எச். ராஜா
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் இந்த ஆய்விற்கு, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீக்ஷிதர்களுக்கு சொந்தமானது. அவர்கள் அனுமதியுடனேயே பொதுமக்கள் வழிபாடு நடத்துகின்றனர் என்று உச்சநீதிமன்றம் 2014 தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. இந்து கோவில்கள் சுரண்டி அழிக்கும் நவீன திப்புசுல்தான்கள் சட்டத்தை மீறி அடாவடியில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.