தெருவுல போறவங்க கூட குற்றம் சொல்லலாம்.. அண்ணாமலைக்கு சுரணை இருக்கானு கேட்கவா?- கே.எஸ்.அழகிரி பொளேர்!
கடலூர் : கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
Recommended Video
பாஜக தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, தெருவில் போகிறவர்கள் கூட குற்றச்சாட்டு சொல்லலாம் எனத் தெரிவித்தார்.
மேலும், மதுரை ஆதினம் திமிர்த்தனமாக பேசுகிறார் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நுழையக்கூடாது என்று எவ்வாறு சொல்வீர்கள் என்றும் கே.எஸ்.அழகிரி சாடினார்.

வார்த்தை முக்கியம்
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேடைப் பேச்சாளர் போல் பேசுகிறார். கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வார்த்தை பிரயோகம் தரக்குறைவாக இருக்கக்கூடாது. காங்கிரஸ் கட்சி பல மடங்கு பெரிய கட்சி, நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியை விமர்சிக்க, பாஜக தலைவர் அண்ணாமலை சூடு, சுரணை என்ற வார்த்தைகளைச் சொல்லியிருப்பதை விளம்பரத்திற்காக பேசுவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

முதல்வர் வேறு எதை கேட்பார்?
சமீபத்தில் சென்னையில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களில், 90% மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் தமிழர்களின் நலனுக்காகத்தான் பேசுவார். அதை விட்டுவிட்டு பிரதமரிடம் தமிழக மக்களை பற்றி பேசாமல், என் மீதுள்ள வழக்கையெல்லாம் ரத்து செய்யுங்க, எங்கள் மீது வழக்கெல்லாம் போடதீங்க என்றா கேட்க முடியும்? தமிழக முதல்வர் பேசியது, மாநிலத்திற்கான தேவை பற்றியும், மாநிலத்தின் உரிமையை பற்றியும்தான்.

அண்ணாமலை
ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் இருந்த மேடையில் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறிள்ளார். பிரதமரிடம் இப்படித்தான் பேச வேண்டும் என விதிமுறைகள் உள்ளதா? தமிழக முதல்வர் கேட்ட கேள்விக்கு ஒன்றுக்கு கூட பிரதமர் பதில் சொல்லவில்லை. சம்பந்தமில்லாத விஷயத்தை பேசிவிட்டுச் சென்ற பிரதமரை, நான் சூடு சொரணை இல்லை என்று சொல்வது முறையாக இருக்குமா?" எனத் தெரிவித்தார்.

தெருவில் போகிறவர்கள் கூட
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, தெருவில் போகிறவர்கள் கூட குற்றச்சாட்டு சொல்லலாம் என்றும், பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டிற்கு, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி விளக்கமாக பதில் அளித்துள்ளார் என்றும், முத்துசாமி அளித்த விளக்கத்திற்கு பாஜகவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்றும், நான் தற்போது உங்களை சூடு சொரணை இல்லை என கேள்வி கேட்கலாமா என்றும் பதில் அளித்தார்.

திமுகவிற்கு வக்காலத்து வாங்கவில்லை
மாநிலத்தை ஆளக்கூடிய முதல்வருக்கு குடும்பம் இருக்கக்கூடாதா? அது தவறா? மாநிலத்தில் எங்கு தொழில் நடந்தாலும் கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் நிலம் வாங்கப் பட்டாலும் அதற்கு முதல்வரின் குடும்பத்தினர் தான் காரணம் என கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா? ஆதாரம் இருந்தால் கூறுங்கள். நான் திமுகவிற்கு வக்காலத்து வாங்கவில்லை. நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. குறைந்தபட்ச விளம்பரத்திற்காக குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள். அவ்வாறு செய்வது தவறு எனச் சாடினார்.

ஒப்பிட்டு பாருங்கள்
கடந்த ஓராண்டில் திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. குறைகள் இல்லை என்று கூற மாட்டேன். குறைவான குறைகளோடு நடைபெறும் அரசாங்கமாக உள்ளது. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியையும், திமுகவின் ஓராண்டு ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். அதில் குறைகள் இருந்தால் கூறுங்கள். நானும் சேர்ந்து விமர்சிக்கிறேன் எனத் தெரிவித்தார் கே.எஸ்.அழகிரி.

தீட்சிதர்கள் பிரச்சனை
பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பிரச்சினை குறித்து பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் எழுந்துள்ள கணக்கு வழக்கு சம்பந்தமான பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க வேண்டும், தீட்சிதர்கள் எல்லை மீறக் கூடாது என்றும், தமிழக முதல்வர் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மதுரை ஆதீனம்
மேலும் பேசிய அவர், இந்து அறநிலையத் துறை சிறப்பாகச் செயல்படுகிறது. சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்த அறநிலையத்துறை அமைச்சர், தீட்சிதர்களுடன் செல்லும் புகைப்படத்தை பார்த்தபோது, யார் அமைச்சர்? யார் தீட்சிதர் என்று தெரியாமல் குழம்பி போனேன். அந்த அளவுக்கு பக்தி பரவசத்துடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளார். ஆனால் மதுரை ஆதினம் திமிர்த்தனமாக பேசுகிறார். இதற்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என்று கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நுழையக்கூடாது என்று எவ்வாறு சொல்வீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications