ஒரே கூட்டணி.. தேர்தல் பகை.. திமுக பிரமுகர் குடும்பத்தில் 7 பேரை வெட்டி தள்ளிய விசிக கவுன்சிலர்
கடலூர் : தேர்தல் முன்விரோதம் காரணமாக பண்ருட்டியில் திமுக பிரமுகர் மற்றும் அவரது குடும்பத்தினரை, விசிகவை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கத்தி, தடிகளால் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால், போட்டி வேட்பாளராக களமிறங்கிய திமுக பிரமுகருக்கும், விசிக சார்பில் வெற்றி பெற்று நகராட்சி கவுன்சிலராக இருப்பவருக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகத்தின்போது நடந்த இந்த சண்டையில் திமுக பிரமுகர் உள்ளிட்டோர் படுகாயமடைந்த நிலையில், நகராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டணி கட்சியைச் சேர்ந்த பிரமுகரை தாக்கிய சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக vs விசிக
கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி 11வது வார்டு திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக கார்த்திகேயன் போட்டியிட்டார். பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை செட்டிப்பட்டறை காலனியை சேர்ந்த திமுக பிரமுகர் குமார், சுயேட்சையாக அதே 11வது வார்டில் போட்டியிட்டார். இதில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட விசிகவின் கார்த்திகேயன் வெற்றி பெற்றார்.

தேர்தல் முன்விரோதம்
தேர்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதற்காக நேற்று மதியம் 12 மணியளவில் குமார், தனது மகன் ஹரீஷுடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் கார்த்திகேயன், ஏன் இங்கு வந்தீர்கள்? என்று கூறி, அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல்
இந்த நிலையில் விசிக கவுன்சிலர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக அவரது சகோதரர்கள் வெற்றிவேல், சாய்குமார், பிச்சாண்டவர் உள்ளிட்ட 12 பேர் அங்கு திரண்டு வந்துள்ளனர். அவர்கள், கவுன்சிலர் கார்த்திகேயனுடன் சேர்ந்து கத்தி, தடிகளுடன் வந்து குமார் மற்றும் ஹரீஷை தாக்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமாரின் மனைவி ராணி, மகன் தனுஷ், மகள் பிரியா மற்றும் உறவினர்கள் சிலர் தடுக்க வந்துள்ளனர். அவர்களையும் கார்த்திகேயன் தரப்பினர் தாக்கி, கத்தியால் வெட்டியுள்ளனர்.

கத்தியால் வெட்டு
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது பற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சண்டையில் படுகாயமடைந்த குமார் உள்பட 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கவுன்சிலர் கைது
குமார் அளித்த புகாரின் பேரில் கவுன்சிலர் கார்த்திகேயன் உள்பட 13 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் கவுன்சிலர் கார்த்திகேயன், அவரது தம்பி வெற்றிவேல், ராஜவர்மன், சவுந்தா்குமார் ஆகியோரை கைது செய்தனர். மற்ற 9 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். திமுக பிரமுகர் - விசிக கவுன்சிலர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications