அதிமுக திட்டங்களை முடக்கும் திமுக அரசு.. கடலூரில் பட்டியலிட்ட ஈபிஎஸ்..முதல்வர் ஸ்டாலின் மீது அட்டாக்
கடலூர்: பள்ளி மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், ஏழை பெண்களுக்கான திருமண உதவிதொகை, தாலிக்கு தங்கம் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடக்கி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடலூரில் பட்டியலிட்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த மழையால் சென்னை புறநகர், டெல்டா மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக கடலூர், மயிலாடுத்துறை மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
போனால் போகட்டும்.. 'தாமரை’யை கழட்டி விடும் எடப்பாடி? மெகா கூட்டணிக்கு 'அவங்களும்’ வர்றாங்களாமே?
எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு
கடந்த 11ம் தேதி சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழை பதிவானது. விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தன. பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இன்று எடப்பாடி பழனிச்சாமி கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி கடலூரில் மழை வெள்ள பாதிப்பை எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அதன்பிறகு மழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவிகள் வழங்கினார். இந்த வேளையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
சேவை செய்யவே அதிமுக
வடகிழக்கு பருவமழையின் ஆரம்ப கட்டத்திலேயே கடலூர் மாவட்டத்தில் பல இடங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்று நேரடியாக வந்துள்ளேன். அதிமுகவை பொறுத்தமட்டில் ஆளும் கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சேவை செய்யும் ஒரு இயக்கமாக உள்ளது. ஏனென்றால் இந்த இயக்கம் ஏழைக்காக தான் துவங்கப்பட்டது.
வெள்ள பாதிப்பு
டெல்டா மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடலூர் மாவட்டம் ஒவ்வொரு பருவமழை காலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் நான் முதல்வராக இருந்தபோதும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். பல்வேறு வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது மழைநீர், வெள்ள நீர் வடியும் சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். குமாரமங்கலத்தில் ரூ.500 கோடியில் கதவணை கட்டி கொடுத்துள்ளோம். விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி செய்தோம். மக்களுக்கான திட்டங்களை அதிமுக தொடர்ந்து செய்து வந்தது.
திமுக மீது அட்டாக்
ஆனால் தற்போதைய திமுக அரசு அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வருகிறது. தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்காக அவர்கள் இருக்கும் இடத்திலேயே சிகிச்சை வழங்குவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்தோம். மாநிலத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை திமுக அரசால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இப்போது 708 இடங்களில் நகர்ப்புற மருந்தகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக திட்டத்தை பெயர் மாற்றி திமுக அரசு செயல்படுத்தும் வேளையில் கிராமங்களை ஒதுக்கிவிட்டனர். கிராமப்புறங்களில் உள்ள அம்மா மினி கிளினிக் திட்டத்தை ஸ்டாலின் அரசு முடக்கி வருகிறது.
நீட் உள்ஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வுக்காக 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இப்போது ஏழை மாணவர்கள் டாக்டர் படிப்பை படித்து வருகின்றனர். நடவு செய்யும் கூலி தொழிலாளியின் மகன், மகள்கள் இன்றைக்கு எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்பை படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 575 பேர் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒரு பைசா செலவின்றி படிக்க அதிமுக வாய்ப்பு வழங்கி உள்ளது.
மக்கள் விரோத ஆட்சி
அதிமுக அரசு ஏழைகளுக்காக நிறைய திட்டங்கள் கொடுத்தது. இதனை படிப்படியாக முடக்கி வருகிறது. மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், சைக்கிள், காலணி அனைத்தும் அதிமுக சார்பில் வழங்கப்பட்டது. மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டனர். மேலும் திருமண உதவித்திட்டம், தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிட்டு விட்டனர். தற்போது ஒரு பவுன் ரூ.38 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாகும் நிலையில் ஏழை பெண்களுக்காக துவங்கிய திட்டத்தை திமுக அரசு முடக்கி உள்ளது. தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுடன் எப்போதும் அதிமுக துணை நின்று சேவை செய்யும்'' என்றார்.