திருநாவுக்கரசருக்கான இடம் காங்கிரஸில் எப்போதும் இருக்கும்.. புதிய தலைவர் அழகிரி
பண்ருட்டி: திருநாவுக்கரசர் நல்லமுறையில் செயல்பட்டார். மாற்றம் என்பது குறைபாடு அடிப்படையில் செய்யப்படவில்லை. திருநாவுக்கரசருக்கான இடம் தமிழக காங்கிரஸில் எப்போதும் இருக்கும்
என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கே. எஸ். அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையத்தில் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

கவுரவம்
அவர் கூறுகையில் நான் 50 ஆண்டுகளாக எளிய தொண்டனாக இருந்து வருகிறேன். ராகுல் காந்தி எனக்கு தலைவர் பதவி கொடுத்து கவுரவம் தந்துள்ளார். அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவுக்கு
காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த கொள்கைகளை தூக்கி பிடித்து நிறுத்த வேண்டும் என்பதே எனது கொள்கையாகும். தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி இயற்கையான கூட்டணியாகும். திமுகவுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்.

ஒத்துழைப்பு
தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். திமுக தலைவர் கருணாநிதி, ராஜீவ் காந்தியிடமும் சோனியா காந்தியிடமும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் தேர்தல்களில் கருணாநிதி காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தார்.

பிரதமர் வேட்பாளர்
பிரதமர் வேட்பாளராக ராகுலை, அவர் முன் மொழிந்தது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே திமுகவுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம் என்றார் கே. எஸ். அழகிரி.












Click it and Unblock the Notifications