2025ல் தனியார் வசமாகும் என்எல்சி.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சொன்ன தகவல்.. அன்புமணி பேச்சு!
கடலூர்: 2025ம் ஆண்டு என்எல்சி நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் காக்கும் நோக்கில் 2 நாட்கள் நடைபயணத்தை தொடங்கியுள்ள அன்புமணி, என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக போராடாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்துள்ள நிலையில், தற்போது என்எல்சி பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கடலூரில் 2 நாள் நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் வழங்கியவர்களுக்கு பணி வழங்காதது, என்எல்சி பணி நியமனங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்த நிலையில், தற்போது என்எல்சி விரிவாக்கம் தொடர்பாக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அந்நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
முப்போக நிலத்தை கொடுத்துவிட்டு என்ன செய்யுறது? NLCக்கு எதிராக நடைப்பயணத்தை இன்று தொடங்கும் அன்புமணி
அன்புமணி நடைபயணம்
இதனை எதிர்த்து என்எல்சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் வானதிராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த நடைபயணத்தை தொடங்கியுள்ளேன். 37 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏற்கனவே மக்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.2,400 கோடி என்எல்சி லாபம் ஈட்டுகிறது. ஆனால் அதனை மற்ற மாநிலங்களில் முதலீடு செய்கிறது.
தனியார்மயமாகும் என்எல்சி
அதுமட்டுமல்லாமல், மண்ணை கொடுத்த மக்களுக்காக இதுவரை எந்த வேலையையும் என்எல்சி நிர்வாகம் கொடுக்கவில்லை. இப்போது மீண்டும் காவல்துறை மூலம் விவசாயிகளை மிரட்டி நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறார்கள். இன்னும் 2 ஆண்டுகளுக்குள் என்எல்சி நிறுவனம் தனியாருக்கு விற்கப்படும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. 1987ல் என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்திய 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதன் மூலம் இன்னும் 40 ஆண்டுகள் நிலக்கரி எடுக்க முடியும். இது பாதிக்கப்பட்ட 49 கிராமங்களின் பிரச்சினையல்ல. இது கடலூர் மாவட்டத்தின் பிரச்சினை.
தமிழ்நாட்டில் தேவையில்லை
என்எல்சி நிறுவனம் வந்த பின், 10 அடியில் இருந்த நிலத்தடி நீர் இப்போது ஆயிரம் அடிக்கு சென்றுள்ளது. என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு மல்லமல்ல, தமிழ்நாட்டிற்கே தேவையில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து, பாமகவும் பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை என்எல்சி நிர்வாகம் கைவிடவில்லை. என்எல்சி-க்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக போராடதது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.
அதிமுக, பாஜகவுக்கு கேள்வி
அன்னூரில் 1,500 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக தலைவர்கள் போராட்டம் செய்கிறார்கள். அன்னூர் விவசாயிகளுக்காக போராடிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நெய்வேலி விவசாயிகளுக்காக போராடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.