அமைச்சர் பங்கேற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மின் தடை! நொந்துகொண்ட திமுக நிர்வாகிகள்!
கடலூர்: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மின் தடை ஏற்பட்டதால் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த திமுக நிர்வாகிகள் நொந்துகொண்டனர்.
அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் பொதுக்கூட்டத்தின் போது மின் தடை ஏற்பட்டால் அது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் என்ன நினைக்க வைக்கும் என்பதை உணர்ந்த அமைச்சர் கணேசன் டென்ஷன் ஆகியிருக்கிறார்.

திராவிட மாடல் அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கணேசன் கலந்துகொண்டார்.
அப்போது அவருக்கு முன்னதாக பேசிய நிர்வாகி ஒருவர், அரசின் சாதனை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, மின் தடையில்லாத நிலை என அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் பவர் கட் ஆனது.
அமைச்சர் கணேசனுக்கு மின் வாரிய அதிகாரிகள் மீது உச்சக்கட்ட கோபம் வந்த நிலையிலும் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என பேசப்படும் நிலையில் எந்த சர்ச்சையும் வேண்டாம் என அமைதி காத்திருக்கிறார்.
இதனிடையே திமுக நிர்வாகிகள் மின் வாரிய அதிகாரிகளுக்கு மாறி மாறி போன் அடித்த நிலையில் சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்தது. மின் தடை ஏற்பட்ட சில நிமிடங்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிக்காரர்கள் மொபைலில் உள்ள பிளாஷ் லைட்டை ஆன் செய்து கூச்சலிடத் தொடங்கினர்.
சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது மின் தடை ஏற்பட்டதால் மூன்று மின் வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் தாம் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போது மின் தடை ஏற்பட்டதால் மின் வாரிய அதிகாரிகளுக்கு போன் போட்டு ஓபன் மைக்கில் திட்டினார் அமைச்சர் துரைமுருகன்.
ஆனால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் சர்ச்சையை தவிர்ப்பதற்காக தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications