தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை... பாதுகாப்பை அதிகரிப்போம் - சத்யபிரத சாகு
கடலூர்: தமிழகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் என்ற சம்பவம் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து உள்ளூர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பல்வேறு போட்டிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் சத்யபிரத சாகு தெரிவித்தார்.
புதுவகை அபராதம்.. கையில் பணம் இல்லை.. இளம் பெண்ணிடம் முத்தம் கேட்ட போலீஸ் அதிகாரி
தேர்தல் விறுவிறுப்பு
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் ஒரு பக்கம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கான விருப்ப மனு உள்ளிட்ட பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்துவதற்காக ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. தமிழக தேர்தல் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக கடந்த 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 2 நாள் பயணமாக சென்னை வந்தனர்.
சத்யபிரத சாகு ஆலோசனை
அனைத்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர்கள், தேர்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூடுதல் வாக்குச்சாவடிகள்
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் குறைந்தது 4 அலுவலர்கள் தேவை. இப்பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதால், அவர்களது நிலை குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது. இதுதவிர ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றம்
தமிழகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. கடலூரில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். புதிதாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் குறித்து, அனைத்து கட்சியினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் இடங்களே தேர்வு செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றுக்கான காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை. எனவே வாக்காளர் அடையாள அட்டைகளில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
100 சதவீதம் வாக்குப்பதிவு
மேலும் புதிதாக சுமார் 21 லட்சம் இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் என்ற சம்பவம் நடைபெறவில்லை. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது என்பது, தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது. மேலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து உள்ளூர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பல்வேறு போட்டிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சத்யபிரத சாகு தெரிவித்தார்.