என்எல்சி விவகாரம்.. அதிமுக, பாஜக கண்களுக்கு விளைநிலங்கள் தெரியவில்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இருந்து என்எல்சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், சுற்றுச்சூழல் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் அன்னூர் விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடும் அதிமுக மற்றும் பாஜகவின் கண்களுக்கு, கடலூர் விளைநிலங்கள் தெரியவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்காக விவசாயிகளிடம் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் எம்எல்சி சார்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டத்தில் விவசாயிகள் அனுமதிக்கப்படாதது விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கடலூரில் 2 நாள் நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கியுள்ளார். இரண்டாம் நாள் பயணத்தை இன்று மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
’A' நிறுவனத்துடன் அமைச்சர்கள் கூட்டு! அண்ணாமலை எடப்பாடி ஏன் வரலை! கடலூரில் அன்புமணி ராமதாஸ் கேள்வி!
அன்புமணி ராமதாஸ் பேட்டி
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், விவசாய நிலங்களில் இருந்து நிலக்கரி எடுப்போம் என்று என்எல்சி துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்களும் ஆதரவாக செயல்படுகிறார்கள். ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். எங்களின் அடையாளத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று மக்கள் சொல்லி வருகிறார்கள். தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட போது, இனி தமிழ்நாட்டில் அனல்மின் நிலையங்களை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
அதிமுக, பாஜக வரவில்லை
ஆனால் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. அன்னூரில் 1,500 விளை நிலங்களை எடுக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடுமையாக போராடினர். ஆனால் அதே கட்சிகளின் தலைவர்களுக்கு கடலூர் மாவட்ட விளை நிலங்கள் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும். இதுவரை விவசாய சங்கங்களும் வரவில்லை. வேளாண்துறை அமைச்சரே, என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்த ஆதரவாக இருக்கிறார்.
தமிழர்கள் புறக்கணிப்பு
அண்மையில் 299 ஜூனியர் இன்ஜினியர்களை என்எல்சி நிறுவனம் வேலைக்கு எடுத்தது. அதில், ஒரு நபர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. தமிழ்நாட்டில் நிலக்கரி எடுத்து, தமிழர்களுக்கு வேலைக் கொடுக்காமல், முதலீட்டையும் செய்யாமல் என்எல்சி நிறுவனம் இங்கு இருக்கிறது. ரூ.56 ஆயிரம் கோடி பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் முதலீடு செய்துள்ளது. இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்ற பாமக துணை நிற்கும். நிலத்திற்கு கூடுதல் பணம் கொடுங்கள் என்பதல்ல எங்களின் கோரிக்கை.
பாமக நிலைப்பாடு
நிலம் எடுக்கக் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. அதுமட்டுமல்லாமல் இன்னும் 2 ஆண்டுகளில் என்எல்சி நிறுவனத்தை தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய அரசே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இருப்பினும் எதற்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பது மட்டும் தான் பாமகவின் நிலைப்பாடு. அதனால் அந்த நிர்வாகத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று தெரிவித்தார்.