சகோதரரிடம் கார் ஓட்ட பயிற்சி பெற்ற பெண்.. பிச்சாவரம் ஆற்றில் காருடன் மூழ்கி பலி
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கார் ஓட்ட பயிற்சி பெற்றபோது காருடன் ஆற்று நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் கீழ வீதியில் மாலன் ஜுவல்லரி நகைக் கடை உரிமையாளர் மங்கேஷ்குமார். இவருடைய மனைவி சுபாங்கி (47). இவர் தனது சகோதரர் நாம்தேவிடம் கார் ஓட்ட கற்றுக் கொடுக்குமாறு கேட்டார்.

அப்போது நாம் தேவும் ஒப்புக் கொண்டு தனது சொந்த காரில் சுபாங்கிக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தார். இன்று காலை சிதம்பரத்திலிருந்து தெற்கு பிச்சாவரம் வரை காரை ஓட்டினார் சுபாங்கி.
அங்குள்ள பாலம் அருகே கார் சென்றுவிட்டு மீண்டும் சிதம்பரம் நோக்கி காரை சுபாங்கி ஓட்டி வந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள உப்பனாற்றில் பாய்ந்து உள்ளே விழுந்தது. உடனே அவரது உறவினர் ராம்தேவ் காரில் இருந்து வெளியே குதித்துவிட்டார்.

ஆனால் காருக்குள் இருந்த சுபாங்கி மாட்டிக் கொண்டார். இதில் கார் முழுவதுமாக நீரில் மூழ்கியது. இதில் சுபாங்கி சம்பவ இடத்திலேயே மூழ்கி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காரை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
உள்ளே இறந்த நிலையில் சுவாங்கி இருந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது. கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது ஆற்றில் கார் மூழ்கி பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications