காதல் மனைவி பிரிந்ததால் விபரீதம்-வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த இளைஞர்.. பதைபதைக்கும் வீடியோ
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காதல் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்ந்ததால் துக்கத்தில் கணவர் பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் தங்கள் அன்றாட பழக்க வழங்கங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தூங்கி எழுவதில் இருந்து மீண்டும் உறங்கச் செல்வது வரை போட்டோக்கள் ஸ்டேட்டஸ்ஸை பகிர்ந்து லைக்குகளுக்கு காத்திருக்கின்றனர்.
சில நேரங்களில் விபரீத ஸ்டேட்டஸ்களும், தற்கொலை வீடியோக்களையும் கூட பகிர்வது அதிகரித்து வருகிறது. தற்கொலை எண்ணம் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியது. ஆனால் அதனையும் வீடியோ எடுத்துப் பகிர்வதுதான் தற்போதைய அவல நிலை. இதுபோன்ற ஒரு நிகழ்வுதான் கடலூரில் நிகழ்ந்துள்ளது.
அரியலூர் மாணவி தற்கொலை.. தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முற்றுகை.. எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது
காதல் திருமணம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுபிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் மோகன்ராஜ் இவருக்கும் பணிக்கன்குப்பம் பகுதியை சேர்ந்த எஸ்டர் சந்தியா இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மோகன்ராஜ் எஸ்டர் சந்தியா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மனைவியுடன் கருத்து வேறுபாடு
இந்த நிலையில் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் எஸ்டர் சந்தியா நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் காதல் மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் சோகத்தில் கடந்த 20ஆம் தேதி மோகன்ராஜ் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தற்கொலை வீடியோ
மேலும் தான் மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை எனவும், உயிர்வாழ விரும்பவில்லை என பூச்சி மருந்தை குடித்ததை வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கும் மனைவிக்கும் அனுப்பியுள்ளார். இத்தகவல் அறிந்த மோகன்ராஜின் உறவினர்கள் மோகன்ராஜ் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மோகன்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
போலீசார் விசாரணை
இதுகுறித்து காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மோகன்ராஜ் கண்ணீர் மல்க பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தற்போது பண்ருட்டி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.