டிச.7-ல் அதிமுக உட்கட்சித் தேர்தல்: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக உள்ளாட்சித் தேர்தல் டிச.7 அன்று நடக்கும், 8 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் என ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவு
அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப்பின் பல பிரச்சினைகளை சந்தித்தது. சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைக்குச் சென்றார். முதல்வர் பிரச்சினையில் ஓபிஎஸ் அதிமுகவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார். டிடிவி துணைப்பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். சசிகலா 4 ஆண்டுகள் தண்டனைப்பெற்று சிறைச்சென்றார்.
அதிமுக உட்கட்சிப்பிரச்சினை
அதன் பின்னர் ஓபிஎஸ் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார். சசிகலா, டிடிவி உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். கட்சி விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமைக்கு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படலாம் என விதி திருத்தப்பட்டது. இந்நிலையில் கட்சிக்குள் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே அதிகார போட்டி எழுந்தது. மறுபுறம் சசிகலா கட்சிக்கு திரும்புவது குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் அதிகரித்த முரண்பாடு
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பின் குழப்பமான நிலை ஏற்பட்டது. தலைமைக்குள் மோதலும், ஒற்றைத்தலைமை எனும் கோரிக்கையும், சசிகலாவின் பொதுச் செயலாளர் வழக்கும் பிரச்சினையாக எழுந்தது. கட்சியில் அதிகாரம் செலுத்துவதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே போட்டி எழுந்தது. மா.செக்கள் கூட்டத்தில் மோதல்எழுந்த நிலையில் நேற்று செயற்குழு கூட்டம் கூடியது.
கட்சி விதிகளில் மாற்றம் வானளாவிய அதிகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்
நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். கட்சி விதிகள் 20, 43, 45, ஆகியவை திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது, கட்சியின் பொதுச் செயலாளர் போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்து நேரடியாக கட்சித்தொண்டர்களால் ஒற்றை வாக்கில் தேர்வு என விதி திருத்தப்பட்டது.
விதிகளில் மாற்றம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் அதிகரிப்பு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்து பொதுக்குழு எந்த முடிவும் எடுக்க முடியாது, கட்சி விதிகளில் அனைத்து திருத்தங்களை செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு அதே நேரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு எதுவும் எடுக்க அதிகாரமில்லை என்று திருத்தப்பட்டது.
உட்கட்சி தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில் கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டிச.7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிட்ட விபரம் வருமாறு.
கட்சி விதி 30-ன் படி அதிமுக உட்கட்சித்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என்கிற அடிப்படையில் டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடக்கிறது.
டிச.7 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.
டிசம்பர் 8 ல் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
டிச.3, 4 தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம், டிச. 5 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். மனுவை திரும்பப்பெற கடைசிநாள் டிச.6 ஆகும்.
தேர்தல் நடத்தும் ஆணையர்களாக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் செயல்படுவார்கள்.
ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளரை ஒற்றை வாக்கின் மூலம் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வுசெய்வர்.
டிச.12 முதல் 23 வரை கட்சி அமைப்புகளின் தேர்தல்
"அதிமுக சட்டதிட்ட விதி 30 பிரிவு 2-ன் படி கட்சி அமைப்புகளில் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறை ஏற்ப முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கட்சி அமைப்பு தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 13 முதல் டிசம்பர் 23 வரை நடைபெற உள்ளது"