உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு: மோடியின் சமூக நீதி திட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. பாஜக புகழாரம்
டெல்லி: உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இது பிரதமர் மோடியின் சமூக நீதி திட்டத்திற்கு கிடைத்த வெற்றி என பாஜக தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து கடந்த 2019- ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட்டன.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பு
இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதாக கூறி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

செல்லும் என தீர்ப்பு
நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில், உயர் ஜாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும் செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்ததனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகிய இருவரும் செல்லாது என்றும் அறிவித்தனர்.

பாஜக புகழாரம்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு மத்தியில் ஆளும் பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏழ்மை நிலையில் வசிப்பவர்களுக்கு சமூக நீதி அளிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது என்று பாஜக புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பிஎல் சந்தோஷ் கூறியதாவது:- ''இடஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கான உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கான சட்ட மாண்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மற்றுமொரு மிகப்பெரிய வெற்றி
பிரதமர் மோடியின் கரீப் கல்யான் தொலைநோக்கு திட்டத்திற்கான மற்றொரு பெருமையாக அமைந்துள்ளது. சமூக நீதிக்கான திசையில் மிகப்பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். இதேபோல், பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவியும் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் வசிக்கும் ஏழைகளுக்கு சமூக நீதி அளிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நோக்கத்திற்கு கிடைத்த மற்றுமொரு மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications