2ஜி அலைக்கற்றை வழக்கு.. விதிமுறைப்படி அரசு தரப்பு வக்கீல் நியமனம் நடக்கவில்லை.. அனல் பறந்த வாதம்
டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் அப்பீல் செய்ய யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் இன்றும் விசாரணை நடைபெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா, அக்கட்சி எம்.பி., கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும், 2017ம் ஆண்டு டிசம்பரில், சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
தினமும் விசாரணை
இந்த தீர்ப்புக்கு எதிராக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2018ம் ஆண்டு மார்ச் மாதம், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, வழக்கு விசாரணை, அக்டோபர் 5ம் தேதி முதல், தினமும் நடக்கும் என்று அறிவித்தார்.
யார் தாக்கல் செய்தது?
இந்த நிலையில், வழக்கை தாக்கல் செய்யும் அதிகாரத்தை யார் கொடுத்தார்கள் என்பதில் நீதிமன்றத்தில் வாதம் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது. எனவே, அலைக்கற்றை விவகாரத்திற்குள் இன்னும் விசாரணை காலடி எடுத்து வைக்கவில்லை. ஏனெனில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தரப்பான, டி.பி., ரியாலிட்டி நிறுவனத்தின் ஆசிப் பால்வா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் முதலில் இப்பிரச்சினையை கேள்வி எழுப்பினார். மேல் முறையீடு செய்ய, சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அளித்த அனுமதி கடிதத்தை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 2018ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், 2ஜி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆஜராக, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேல்முறையீட்டு மனுவை துஷார் மேத்தாவோ அல்லது அவரது பெயரிலோ தாக்கல் செய்யவில்லை. இது தவறான நடைமுறை என்றார்.
ஆதாரம்
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், துஷார் மேத்தா விஷயம்தான் வாதிக்கப்பட்டது. முன்னாள் தொலைத் தொடா்பு செயலாளா் சித்தாா்த் பெஹுரா சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் சித்தாா்த் லூத்ரா வாதிடுகையில், சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்பதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன். அதில் எந்த சந்தேகம் இருந்தாலும், எங்கள் தரப்பிடம் கேட்கலாம்.
அரசுக்கு அதிகாரம் உள்ளது
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின்: சித்தார்த் லுத்ரா தாக்கல் செய்த பதிவில் உள்ள மாறுபாடுகளை நீதிமன்றத்தில் இன்று இரவு 11 மணியிலிருந்து 12 மணிக்குள் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்கிறேன். இந்த வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளதில் சட்ட விதி மீறல் இல்லை. விதிகளுக்கு உட்பட்டுதான், அப்பீல் செய்துள்ளோம்.
தற்போதைய விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய சி.ஆர்.பி.சி யின் 378 வது பிரிவின் கீழ் சிபிஐயின் சிறப்பு வக்கீலுக்கு வழங்கப்பட்ட அனுமதி ஒரு அரசு நிர்வாக செயல்பாடாகும், இதில் நீதிமன்றம் நேரடியாக சம்பந்தப்படவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், விசாரணையை நீதிமன்றம் ஆரம்பிக்கலாம். இவ்வாறு அவர் தனது வாதத்தை முன் வைத்தார். ஆனால், எதிர் தரப்பு இதை ஏற்கவில்லை.
தவறான நியமனம் என வாதம்
எதிா்மனுதாரரான, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி சுரேந்திரா பிபாரா சாா்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஹரன், வாதிடுகையில், செக்ஷன் 24(1) என்ன சொல்கிறது? அதன்படி இங்கு அப்பீல் செய்யப்படவில்லை. இது ஆர்டிகிள் 14க்கு எதிரானது. பிரிவு 24 (8) இன் கீழ், வழக்கறிஞர் நியமனத்தை, உயர்நீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செய்ய முடியும் என்று கூறிவிட முடியாது. சட்டமன்றம், நீதிமன்றம் இணைந்து ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவை தன்னிச்சையாக செய்ய முடியாது. அசாதாரண வழக்கு என்று சொன்னால், அதற்கு அசாதாரண ஆலோசனை தேவை என்பதையும் ஒப்புக்கொள்ளுங்கள்.
நாளைக்கு ஒத்திவைப்பு
அப்பீல் செய்ய அரசு வழக்கறிஞரை நியமிக்கும்போது, ஹைகோர்ட்டுடன் கலந்தாலோசித்துதான் அந்த முடிவை எடுக்க வேண்டும். ஹைகோர்ட்டில் ஒரு அரசு வழக்கறிஞரை நியமிக்கும்போதும், அப்பீல் செய்ய நியமிக்கும்போதும், 24(1) செக்ஷனின்கீழ் அது நடக்காவிட்டால், அந்த நியமனம் செல்லத் தக்கது இல்லை. இதற்கு பல தீர்ப்புகள் முன் உதாரணமாக உள்ளன. இவ்வாறு கூற பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார் ஹரிஹரன். இந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.