கூடிய காங்கிரஸ் மேல்மட்டம்.. பங்கேற்காத மன்மோகன் சிங் உள்ளிட்ட 5 மூத்த தலைவர்கள்
காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி உள்ளிட்ட 5 தலைவர்கள் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியையும் பறிகொடுத்தது. இந்த நிலையில், அனைத்து இந்திய காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
காங்கிரஸின் அடுத்தக்கட்ட திட்டங்கள், தேர்தல் தோல்விகள் மற்றும் நிலையான தலைமை குறித்து ஆலோசிக்க இன்று அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் மாலை கூடுகிறது.

மன்மோகன் சிங் பங்கேற்பதில் சிக்கல்
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மன்மோகன் சிங், தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக அவர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனக்கூறப்படுகிறது.

4 மூத்த தலைவர்கள் பங்கேற்பார்களா?
அதேபோல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அண்மையில் அறிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சருமான ஏ.கே.அந்தோனியும் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார். இவர்களுடன் மேலும் 3 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

57 தலைவர்களுக்கு அழைப்பு
இந்த கூட்டத்திற்காக 57 காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற மூத்த நிர்வாகிகள் கூட்டத்திலும் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் ஷர்மா, கே.சுரேஷ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிய மன்மோகன் சிங்
கடந்த 2020 ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் தொடங்கியவுடன் தேசிய பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்த அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட உட்கட்சிக்குழுவின் தலைவராக மன்மோகன் சிங் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அதன் பின்னர் மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஏற்கனவே இதய அறுவை சிகிச்சைகளை செய்துகொண்ட மன்மோகன் சிங், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications