காதில் தேன் பாயுதே.. 24 மணி நேரத்தில் கொரோனா 'டெத்ஸ்' இல்லை.. 'கான்ஃபிடண்ட்' தரும் ரிப்போர்ட்
டெல்லி: கொரோனாவால் நாடு திண்டாடிக் கொண்டிருக்க, சற்று ஆறுதல் அளிக்கும் ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை கடுமையாக உள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரம் வரை சற்று அடக்கி வாசித்தது போல் காட்டிக் கொண்ட கொரோனா, அதன் பிறகு டபுள், ட்ரிபிள் என்று கொத்து கொத்தாக மக்களை ஆட்டுவித்து வருகிறது.
பிரதமர் மோடி எடுத்துக்கொண்டாரே கோவாக்சின்.. அது இரட்டை மரபணு மாறிய கொரோனாவை அழிக்கிறது- அமெரிக்கா
ஏற்கனவே பல மாநிலங்கள் முழு லாக் டவுன் அறிவித்துவிட்ட சூழலில், நாடு முழுவதும் கடந்த ஆண்டை போல மீண்டும் லாக் டவுன் அமல்படுத்துவது குறித்து டெல்லியில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நோ கொரோனா டெத்ஸ்
இந்த சூழலில் தான், பல மாதங்களாக காய்ந்து போன மாட்டுக்கு புல்கட்டு கிடைத்தது போல், ஒரு சிறிய அப்டேட் நமக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு கொரோனா மரணம் கூட பதிவு செய்யப்படவில்லை. (கேட்கும்போதே காதில் தேன் வந்து பாய்கிறதே!)
உந்து சக்தி
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் டையு; லடாக் (யுடி), திரிபுரா, லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து அங்கு இதே போன்று கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் நிலையில், கொரோனா ஃப்ரீ பகுதிகளாக கூட மாற வாய்ப்புள்ளது. இந்த நிலை மற்ற மாநிலங்களுக்கு ஆறுதலாகவும், உந்து சக்தியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3000 தாண்டிய மரணங்கள்
இருப்பினும், COVID-19 இரண்டாவது அலைக்கு மத்தியில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 3.6 லட்சம் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளையும், 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 01 ஆயிரத்து 187 ஆக உள்ளது.
29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர்
அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து க்யூர் ஆகியுள்ளார்கள். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.