தள்ளாத வயதிலும் உற்சாகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட 103 வயது பாட்டி!
டெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசிக்கும் ஜே. காமேஷ்வரி என்ற 103 வயது மூதாட்டி தள்ளாத வயதிலும் உற்சாகத்துடன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக் கொண்டார்.
இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு இணை நோய்களை கொண்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
86% பாதிப்புகள்
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் நாட்டின் மொத்த பாதிப்பில் 86% பாதிப்புகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் சிறப்பு குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. கொரோனா பாதிப்புகளை விரட்டியடிக்க நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன.
தடுப்பூசிகள் போடும் பணி தீவிரம்
கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு இணை நோய்களை கொண்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மிக அதிக வயது
இந்த நிலையில் நாட்டில் மிக அதிக வயதுடைய 103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசிக்கும் ஜே. காமேஷ்வரி என்ற 103 வயது மூதாட்டி இந்த தள்ளாத வயதிலும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக் கொண்டார். இவர் இந்தியாவின் மிக வயது முதிர்ந்தவர் என தரவுகளின் அடிப்படையில் கூறப்படுகிறது.