நள்ளிரவில் ரத்த பூஜை! கடவுளின் உத்தரவாம்.. தலைநகர் டெல்லியிலேயே நடந்த நரபலி.. பறிபோன சிறுவன் உயிர்!
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் கடவுளுக்கு 6 வயது சிறுவன் ஒருவனை இருவர் கூட்டாக சேர்ந்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவன் கட்டடத் தொழிலாளியின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
டெல்லியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை பெண் ஒருவர் நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் நரபலி கொடுக்கும் அதிர்ச்சி சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. குழந்தை வரம் வேண்டி, புதையல் வேண்டி இப்படி இன்ன பிற காரணங்களுக்காகவும் மக்கள் நரபலி கொடுத்து வருகின்றனர். இது குறித்து எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியும், சாமியார்கள் வழிகாட்டுதலின் பேரில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அந்த வகையில் தற்போது டெல்லியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொலை
டெல்லி லோதி காலணியில் மத்திய ரிசர்வ் காவல்துறையினருக்கான தலைமையகம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கடவுளுக்காக 6 வயது சிறுவன் ஒருவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளான். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "தெற்கு டெல்லியில் உள்ள கட்டுமான தளத்தில் சனிக்கிழமை இரவு இந்த கொலை நிகழ்ந்துள்ளது. எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது சிறுவனின் உடல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இருந்தது.

நரபலி
பிரேதத்தை உடனடியாக கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இந்த சம்பவம் தொடர்பாக அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த 2 பேரை கைது செய்து விசாரித்ததில்தான் சில உண்மைகள் வௌிவந்துள்ளன. அதாவது, இவர்கள் இருவரும் பீகாரை சேர்ந்தவர்கள். உயிரிழந்த சிறுவன் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவன். சிறுவனின் குடும்பத்திற்கும், கொலையாளிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் குமார் மற்றும் அமன் குமார் ஆகியோருக்கும் எந்த முன் விரோதமும் கிடையாது.

போதை
இவர்கள் அனைவருமே இந்த கட்டடப் பணியை செய்து வரும் தொழிலாளிகள்தான். இவ்வாறு இருக்கையில், சனிக்கிழமை இரவு விஜய் மற்றும் அமன் சிறுவனை தனியாக அழைத்த சென்றுள்ளனர். பின்னர் அவனுக்கு போதை பொருள் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சிறுவன் மயக்கமடைந்துள்ளான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவன் கழுத்தை அறுத்துள்ளனர். சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளான். சிறுவனை காணவில்லை என அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் நடத்தி சோதனையில் சிறுவனின் உடல் கிடைத்துள்ளது." என்று கூறியுள்ளனர்.

மூடநம்பிக்கை
கொலைக்கான காரணம் குறித்து கேட்டபோது, "கடவுள் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் சிறுவனை கொன்றதாக விஜய் மற்றும் அமன் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்" என கூறியுள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியிலேயே நரபலி கொடுக்கும் மூட நம்பிக்கை பழக்கம் தொடர்ந்து வருவது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications