பெரும் ட்விஸ்ட்.. நேபாள சாமியார் என நம்பிய பெண் சீன உளவாளி.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் புத்த துறவி போன்று பாரம்பரிய ஆடைகளை அணிந்தபடி நேபாள நாட்டு அடையாளங்களுடன் தங்கியிருந்த சீன நாட்டு பெண் கைது செய்யபட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆசியாவில் சீனாவிற்கு பெரும் சவால் அளிக்கும் ஒரே நாடாக இந்தியா தான் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாகவும் உள்ள சீனா, இந்தியாவுடன் அவ்வப்போது வாலாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்தியா சீனா இடையே..
அருணாசல பிரதேசத்தை தெற்கு தீபெத் என்று கூறும் சீனா தங்கள் நாட்டின் ஒருபகுதி என்றும் கூறி வருகிறது. அவ்வப்போது எல்லையில் அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பதிலடி கொடுப்பதோடு, அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை திட்டவட்டமாக கூறி வருகிறது. இப்படி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமீப காலமாக வேறுபாடுகள் அதிகரித்து காணப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராக
பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் சர்வதேச மன்றங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிக்கும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இன்னொரு பக்கம் இலங்கையை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கிறது சீனா. ஒருபக்கம் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்க்கும் பணியிலும் சீனா ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டுக்களும் இருந்து வருகின்றன.

அகதிகள் முகாமில் நேபாள துறவி
இந்த நிலையில், டெல்லியில் உள்ள திபெத்திய அகதிகள் முகாமில் நேபாள துறவி அடையாளத்துடன் தங்கியிருந்த சீன நாட்டு பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவுக்காக இந்தப் பெண் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. கைது செய்யப்பட்ட சீன பெண்ணின் அடையாள ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், அவருடைய பெயர் டோல்மா லமா என்றும் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் வசிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்த போலி ஆவணங்களும் சிக்கின.

புத்த துறவி போன்று பாரம்பரிய ஆடைகள்
உண்மையில் அந்தப் பெண் பெயர் கை ரூவோ என்றும் விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். டெல்லி பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ள திபெத்திய அகதிகள் காலனியான மஜ்னு கா தில்லா என்ற இடத்தில் சீன பெண் வசித்து வந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். புத்த துறவி போன்று பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு இந்தப்பெண் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் சீன பெண் கடந்த 2019- ஆம் ஆண்டு இந்தியா வந்தது தெரியவந்துள்ளது.

உளவு பார்க்கும் நோக்கத்தில்
இதையடுத்து கை ரூவோ என்ற இந்த சீன பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சீன கம்யூனிச தலைவர்கள் தன்னை கொல்ல சதி போடுவதாகவும் தனக்கு ஆங்கிலம் மண்ட்ரின், நேபாளி ஆகிய மொழிகள் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். சீன பெண் கூறுவது உண்மைதானா அல்லது சீனாவுக்காக உளவு பார்க்கும் நோக்கத்தில் பதுங்கியிருந்தாரா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புத்த துறவி வேடத்தில் சீன நாட்டு பெண் டெல்லியில் பதுங்கியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications