குடியுரிமை சட்ட திருத்துக்கு எதிராக நீடிக்கும் போராட்டங்கள்- டெல்லியில் மீண்டும் வன்முறை
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் டெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதனால் பதற்றம் நிலவி வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் கொதிந்தெழுந்தது. அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
மேலும் டெல்லி, கர்நாடகம், தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஜாப்ராபாத் பகுதியிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
மீண்டும் மோதல் ஏற்பட்டது
இன்று நண்பகல் 12 மணிக்கு போராட்டம் தொடங்கியது. சீலம்பூர்பகுதியில் மக்கள் அனைவரும் கூடினர். அப்போது மத்திய அரசு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
பேருந்துகள்
கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் முயற்சி நடைபெற்று வருகிறது. இரு பேருந்துகள் மீது கல்வீசி சூறையாடப்பட்டன.
|
ரயில் நிலையங்கள்
சீலம்பூர்- ஜாப்ராபாத் இடையே உள்ள 66 அடி சாலை மூடப்பட்டது. அது போல் ஜாப்ராபாத், மவுஜ்பூர்- பாபர்நகர், சீலம்பூர்- கோகுல்பூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் இயங்காது. இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது.
போராட்டம்
ஜாமியா நகரில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பும் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் பேருந்துகள், வாகனங்களுக்கும் தீவைத்து கொளுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.